நிதி நிர்வாகத்தில் தோல்வியையே தழுவியுள்ளீர்கள்.. அமைச்சர் பிடிஆர்-க்கு நாராயணன் திருப்பதி பதிலடி!
சென்னை: மத்திய அரசை கேள்விகேட்கும் நீங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா? என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அண்மையில் ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசின் பொருளாதார குறித்த அறிவுரைகளை தாங்கள் ஏன் ஏற்க வேண்டும் என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார். இது தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகியது.
இதற்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார். அதில், மத்திய அரசின் பொருளாதாரத்தையும், மாநில அரசின் பொருளாதாரத்தையும் ஒப்பீடு செய்வது வேடிக்கையாக உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு இல்லையெனில் மாநில அரசினால் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது என்பதை பொருளாதாரம் அறிந்த பொது அறிவுள்ள அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.

தமிழக வரிவருவாய்
மத்திய அரசிடம் ஒரு ரூபாய் கொடுத்தால், 33 அல்லது 35 காசு மட்டுமே திரும்பப் பெறுவதாக கூறியுள்ளீர்கள். கூட்டாட்சி முறை கொண்ட இந்திய பொருளாதாரம் குறித்த புரிதல் தங்களுக்கு இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. தமிழகம் உற்பத்தி மாநிலம் என்பதால், இங்கு வரிவருவாய் அதிகமுள்ளது. ஆனால், வரி வருவாய் அல்லாத விவசாயத்தையே பெரிதளவு சார்ந்துள்ள மாநிலங்கள் ஏழை மாநிலங்களாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு
உற்பத்தி மாநிலங்களைவிட ஏழை, மாநிலங்களுக்கு அதிக விழுக்காடு நிதி பகிர்வு இருக்கத்தான் செய்யும் என்பதையும், உங்களுக்கு தெரிந்ததைவிட மத்திய அரசுக்கு அதிகம் தெரியும் என்பதையும் உணருங்கள். கடந்த 8 ஆண்டுகளில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், கடன் குறைப்பதில், வேலைவாய்ப்பை பெருக்குவதில், சொத்துக்களை உருவாக்குவதில், கட்டமைப்புகளை விரிவாக்குவதில், முதலீடுகளை குவிப்பதில் மத்திய அரசு சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதி
அமைச்சர் தியாகராஜன் அவர்களே, தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் அளித்திருந்த நிலையில், அதை நிறைவேற்றும் முக்கிய பொறுப்பு உங்களை சார்ந்தது என்பது நினைவிருக்கிறதா? குடும்பப் பெண்களுக்கு ரூ.1000, எரிவாயு மானியம் ரூ.100, கல்வி கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூடுதல் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முனைவர் பட்டம் பெற்ற உங்களால் நிறைவேற்ற முடியவில்லையே? பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் நீங்கள் தோல்வியுற்றுள்ள நிலையில், மற்றவர்களின் கருத்தை அறிந்து செயல்படுவது தானே சரியானதாக இருக்கும்.

நிதி நிர்வாகத்தில் தோல்வி
அரசியலமைப்பு சட்டப்படி தான் மத்திய அரசு அறிவுறுத்துகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் இரட்டை முனைவர் பட்டம் பெற்றவராக இருக்கலாம், ஆனால் நிதி நிர்வாகத்தில் தோல்வியையே தழுவியுள்ளீர்கள் என்பதை உணருங்கள். ஆணவத்தை களைந்து மற்றவர்களின் கருத்துகளை உள்வாங்கி மக்கள் நலன் காக்க செயல்படுங்கள் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications