சென்னை நீர் பற்றாக்குறையை தீர்க்க என்ன நடவடிக்கை.? விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை: தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்களின் அன்றாட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய என்னென்ன நடவடிக்கைகளை இதுவரை எடுத்து வருகிறீர்கள் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தில், அதிக அளவில் சிக்குண்டு தவிப்பது தலைநகர் சென்னை தான். தலைநகர் என்பதால் இங்கு குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் இன்னபிற காரணங்களுக்காக, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுமிலிருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு சமீப ஆண்டுகளாக படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னைக்கு நீர் ஆதாரங்களாக விளங்கிய ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. கடைசியாக புழல் ஏரியிலியிலிருந்து சென்னை நகர மக்களின் தேவைக்காக குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. ஒருகட்டத்தில் மோட்டாரை வைத்து உறிஞ்சி தண்ணீர் எடுக்கப்பட்டது.
தற்போது அப்பணிகளும் கடந்த வாரத்துடன் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் உச்சக்கட்ட தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருகிறது தமிழகத்தின் தலைநகரான சென்னை. ஏரிகள் வறண்டதால் கோடை காலம் துவங்கியது முதலே, நிலத்தடி நீரை தொடர்ந்து அதிமாக பயன்படுத்தினர் சென்னை வாசிகள்
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததாலும், கொளுத்தும் கோடை வெயிலாலும் ஒருகட்டத்தில் நிலத்தடி நீரும் காலியானது. 400 அடி வரைக்கும் போர்வெல் அமைத்தாலும், நகரின் மையப்பகுதிகளில் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் தற்போது சென்னை வாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சமயத்தில், குடிநீர் மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
தண்ணி இல்லப்பா.. வீட்ல இருந்தே வேலை செய்யுங்க.. ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்கள் கட்டளை
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து பொது நல வழக்குஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவானது நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். எனவே தற்போதைய கடும் பஞ்சத்தில், சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை தங்கு தடையின்றி பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என வினவினர்.
மேலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டதால், மக்கள் தண்ணீரின்றி அவதிப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், அவர்களின் தண்ணீர் கஷ்டத்தை போக்க எந்தெந்த வழிகளில் தண்ணீர் பெறப்பட்டு விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கபடபடுகிறது, என்பது குறித்து வரும் ஜூன் 17-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் கிழக்கு கடற்கரை சாலை உட்பட பிற இடங்களில் தமிழக அரசு கட்டமைத்து வரும், கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளின் நிலை என்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.