டெல்லி அப்செட்! 23ம் தேதி இருக்கு "கச்சேரி".. ரரக்களுக்கு எடப்பாடி போடும் லாக்! அதுவும் 4 பேருக்காம்
சென்னை: அதிமுக சார்பாக வரும் 23ம் தேதி நடத்தப்பட உள்ள மீட்டிங்கில் பாஜக கூட்டணி குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை செய்ய உள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக இடையிலான உறவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மோதல்கள் நிலவி வருகின்றன. அதிலும் சமீபத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக அதிமுக - பாஜக உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது.
அதிமுக ஐடி விங் கூட்டத்தில் பேசிய பொன்னையன் பாஜகவை கடுமையாக சாடி இருந்தார். பாஜகவிற்கு ஆதரவான பிம்பத்தை உடைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்?
கூட்டத்தில் பேசிய பொன்னையன், பாஜக தன்னை எதிர்க்கட்சி போன்று மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துகிறது. அதற்கான பிம்பத்தை ஏற்படுத்த பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். இதற்காக நம்முடைய ஐடி விங் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது, என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

பொன்னையன்
பொன்னையன் கருத்தை அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். இதோடு பிரச்சனை முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் ஜெயக்குமார், செல்லூர் ராஜு என்று முன்னாள் அமைச்சர்கள் பாஜகவை விமர்சித்து பேசினார்கள். அதன்பின் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை மக்கள் ஏற்க வாய்ப்பே இல்லை. அவரவர் நாங்கள் இத்தனை இடங்களை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது.

தீவிர முயற்சி
அதற்காக முயற்சி செய்வது ஆகியவற்றில் தவறு இல்லை. ஆனால் மக்கள் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டார்கள் என்று கூறினார். அதோடு செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், கூட்டம் திரட்டுவது எல்லாம் பெரிய விஷயமே அல்ல. அதெல்லாம் எளிதாக செய்ய முடியும். பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம்; அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். பாஜகவை வளர்க்க அண்ணாமலை ஏதேதோ செய்கிறார். தமிழிசை, எல் முருகனுக்கு பதவி கிடைத்தது போல அண்ணாமலை தனக்கு பதவி கிடைக்கும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக ஏதேதோ செய்கிறார் என்று செல்லூர் ராஜு குறிப்பிட்டார்.

அதிமுக கூட்டம்
இந்த நிலையில்தான் 23ம் தேதி நடக்க உள்ள அதிமுக கூட்டத்தில் அதிமுக - பாஜக இடையிலான மோதல் பற்றி விவாதிக்க போவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதில் அவை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைகள்
இதில் பாஜக பற்றி அதிமுக தலைகள் பேசிய கருத்து குறித்து எடப்பாடி விசாரிப்பார் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் பாஜகவை விமர்சித்து அதிமுக தலைகள் சிலர் பேசிய கருத்துக்களை தமிழ்நாடு பாஜகவும், டெல்லியில் உள்ள பாஜக தலைகள் சிலரும் விரும்பவில்லையாம். பாஜக தலைகள் சிலர் இதனால் தமிழ்நாடு அதிமுக நிர்வாகிகள் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோதல் பற்றித்தான் அதிமுக கூட்டத்தில் எடப்பாடி ஆலோசனை செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி என்ன சொன்னார்?
நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை வளர்க்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டி பேசுவது இயல்பான விஷயம்தான். பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்து வருகிறது, என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார். இந்த நிலையில் 23ம் தேதி நடக்கும் மீட்டிங்கில் ரத்தத்தின் ரத்தங்கள் சிலருக்கு கால் கட்டு போடும் வகையில் எடப்பாடி பேசுவார் என்று கூறப்படுகிறது.

என்ன பேசுவார்கள்
முக்கியமாக 4 மூத்த தலைகளுக்கு.. பாஜகவிற்கு எதிராக பேசாதீங்க என்று வாய் பூட்டு போடும் வகையில் எடப்பாடி பேசுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி அதிமுக - பாஜக கூட்டணி முறிய வாய்ப்பு இல்லை என்றே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறு சிறு மோதல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கூட்டணி முறியாது. அதிமுக கூட்டத்திலும் இதை பற்றி முறையாக ஆலோசனை செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications