பவன் கல்யாண் பல ஆயிரம் பேரை கூட்டினாரே.. விஜய் எல்லாம் பார்த்து கத்துக்கணும்.. பரபரத்த 10 விஷயம்!
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் விஜய் கண் முன்னே 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. விஜய் தனது பிரச்சாரத்திற்கு கூட்டம் வர வேண்டும் என்று திட்டமிட்டு நகர்த்திய காய்கள்.. கடைசியில் மக்களின் உயிரை குடித்துவிட்டது.
அரசியலுக்கு வந்த 1 வருடத்தில் விஜய் எதிர்கொண்டு இருக்கும் சவால் இது என்பதை விட அவர் மீது படிந்த நீக்க முடியாத கறை இது என்றுதான் கூற வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். சமீப காலங்களில் இந்திய அரசியலில் ஒரே வெற்றிகரமான நடிகர் என்றால் அது பவன் கல்யாண் மட்டும்தான். கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்கள் அரசியலில் தங்கள் உயரத்தை அடைய முடியவில்லை. இப்போது நடிகர் விஜய் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பவன் கல்யாண் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் மூலம் விஜய் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். தனது கூட்டத்தில் நடக்கும் அசம்பாவிதத்தை கூட சதி வேலை என்று சொல்லும் அளவிற்கு அப்பாவியாக அல்லது அரசியல் தலையாக இருக்கிறார். ரசிகர்களை கையாள தெரியாதது, மேடை பேச்சில் சில தவறுகள், கூட்டத்தை சரியாக நடத்த தெரியாதது, கிரவுண்டு வேலைகளை செய்யாமல் இருப்பது என்று சில சொதப்பல்களை செய்து வருகிறார்.
பவன் கல்யாண் - விஜய் அரசியல்
நடிகர் பவன் கல்யாண் நடிகர் மற்றும் அரசியல்வாதி என இரு துறைகளையும் எப்படி கையாண்டார் என்பதிலிருந்து விஜய் கற்றுக்கொள்ளக்கூடிய 8 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
1. விஜய் கூட்டியதை விட 5 மடங்கு கூட்டங்களை பவன் கல்யாண் கூட்டி இருக்கிறார். ஆனால் அங்கெல்லாம் அசம்பாவிதம் நடக்கவில்லை. காரணம் அவருக்கு பின் ரசிக மனோபாவத்தோடு வந்தவர்களுக்கு அவர் அரசியலும் சொல்லிக்கொடுத்தார்.
2. அவர் ஒரு பிரச்சனை, போராட்டம் வந்தால் ஓடி ஒளியவில்லை. செய்தியாளர்களை சந்தித்தார். மக்களை நேரில் சென்று சந்தித்தார். அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை.
3. பவன் கல்யாண் தனது ஜன சேனா கட்சியை மாவட்டக் குழுக்களுடன், மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்களுடன் கட்டமைப்பதில் கவனம் செலுத்தினார். விஜய் தனது தனிப்பட்ட நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பாமல், ஒரு நிலையான அமைப்புக் கட்டமைப்பை உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
4. அரசியல் செய்திகளை தொடர்ச்சியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பவன் கல்யாண் வல்லவர். இளைஞர் அதிகாரம், ஊழல் எதிர்ப்பு போன்ற முக்கிய விவரங்களில் அவர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அதிலும் களத்திலும் இறங்கி போராட்டங்களை செய்தார். விஜய் இவரிடமிருந்து கற்று முக்கிய விவகாரங்களில் களத்தில் இறங்கி போராட வேண்டும்.
5. அடிமட்ட மக்களுடன் பவன் கல்யாண் தொடர்ந்து இணைந்திருக்கிறார். கம்பிகள் வைக்காத சிறிய வாகனங்களில் பயணம் செய்தும், கிராமங்களுக்கு நடந்தும் மக்களை அவர் நேரில் சந்திக்கிறார். விஜய் இவரைப் பின்பற்றுவதன் மூலம் 'பிரபல அந்தஸ்து' என்ற தடையை உடைத்து, மக்களுடன் நெருங்க முடியும். எம்ஜிஆர் கூட அதைதான் செய்தார்.
6. சினிமா மற்றும் அரசியலுக்கு இடையே பவன் கல்யாண் ஒரு தெளிவான எல்லையை வைத்திருக்கிறார். இந்த இரு அடையாளங்களையும் அவர் ஒருபோதும் குழப்புவதில்லை. விஜய் அரசியல் பிரச்சாரங்களிலிருந்து திரைப்பட பாணியில் பேசுவதை தவிர்த்து, அரசியல் ஸ்டைலுக்கு மாற வேண்டும்.
7. ஆந்திர பிரதேச அரசியலில் பவன் கல்யாண் செய்த போராட்டம் ஒன்று அவரின் அரசியல் வாழ்க்கையை மாற்றியது. தற்போது அதே ஸ்டைலில் விஜய் களமிறங்கி உள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு நந்தியாலா பகுதியில் அதிகாலை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடு கைதுசெய்யப்பட்டார். இதை அடுத்து, அவரை ஆதரிப்பதற்காக பவன் கல்யாண் விஜயவாடா நோக்கிச் சென்று போராட்டம் செய்தார். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் சாலை மார்க்கமாகச் செல்ல முடிவு செய்தபோது, அவரது வாகன அணிவகுப்பு இரண்டு முறை தடுக்கப்பட்டது. ஜீப் மீது அமர்ந்தபடி இவர் வேகமாக சென்ற பயணம் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஆனால் அதன்பின் இவரின் ராலி தடுக்கப்பட்டது.
இதனால் கல்யாண் தனது வாகனத்திலிருந்து இறங்கி விஜயவாடாவில் உள்ள மங்களகிரி நோக்கி நடந்து செல்ல வேண்டியதாயிற்று. விஜயவாடாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டதால், கல்யாண் அனுமாஞ்சிபள்ளியில் சாலையில் படுத்து போராட்டம் செய்தார். அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றது. மாநில அரசையும், போலீசாரையும் எதிர்த்து அவர் செய்த இந்த போராட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றதோடு.. அவரின் அரசியலை புரட்டி போட்டது. அதோடு சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் கூட்டணிக்கும், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக அமைந்தது. அதை போல விஜயும் எப்போதும் களத்தில் இருக்க வேண்டும்.
8. மீடியா மற்றும் சமூக ஊடகங்களை பவன் கல்யாண் திறம்படப் பயன்படுத்துகிறார். அவரது அறிக்கைகளும், காட்சிகளும் மக்களை சென்றடைவதை அவர் உறுதி செய்கிறார். விஜய் தனது தகவல் தொடர்பு குழுவை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நிலையான கருத்தை உருவாக்கலாம். முக்கியமாக செய்தியாளர்களை பவன் அடிக்கடி சந்தித்தார். விஜயும் செய்தியாளர் சந்திப்பிற்கு அஞ்சாமல்.. நேரடியாக செய்தியாளர்கள் முன் கருத்துக்களை தெரிவிக்க தொடங்க வேண்டும்.
9. அரசியல் பொதுக்கூட்டங்களை திட்டமிடுவதில் பவன் கல்யாண் மிக கவனமாக செயல்படுகிறார். சரியான பாதை தேர்வு, ஒலிபெருக்கி அமைப்பு, தன்னார்வக் குழுக்கள், கூட்ட மேலாண்மை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்துகிறார். கடைசி நேர குழப்பங்களை தவிர்ப்பதில் விஜய் இவரிடமிருந்து சிறந்த பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
10. கட்சி உறுப்பினர்களுக்கு எளிதில் அணுகக்கூடியவராக பவன் கல்யாண் திகழ்கிறார். அடிமட்ட தொண்டர்களுடன் அவர் அடிக்கடி நேரடியாக கலந்துரையாடுகிறார். துணை முதல்வர் ஆகும் முன் அவர் ரசிகர்களுடன் நெருக்கமாக உள்ளது. விஜய் தன்னைச் சுற்றியுள்ள தூரத்தை குறைத்து, இவரைப் போல மக்களை எளிதாக அணுக கூடியவராக இருக்கும்.












Click it and Unblock the Notifications