மா.செக்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு.. எடப்பாடி கேம் பிளான் என்ன? இந்த 6 விஷயங்கள் தான் ஹைலைட்!
சென்னை : பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி.தினகரன் ஒன்றிணைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம், அதிமுக சட்ட விதி திருத்தங்களை அங்கீகரித்துள்ள சூழலில் நாளை நடைபெற உள்ள மா.செக்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களில் அவருக்குப் பின்னடைவே ஏற்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் சட்ட விதிகள் அனைத்தையும் அங்கீகரித்து இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவித்த பொதுக்குழு தீர்மானங்களையும் அங்கீகரித்துள்ளது. ஓபிஎஸ்ஸுக்கு கடைசி வாய்ப்பாக இருந்த தேர்தக் ஆணையமும் கதவை அடைத்துள்ளது.
இந்நிலையில் நாளை (மே 17) மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு அதிமுக மா.செக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதன் பின்னணி குறித்துப் பார்க்கலாம்.
நாளைய கூட்டத்தில் 5 முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
1. தேர்தல் ஆணையம் அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதை கட்சியினருக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த மா.செக்கள் கூட்டம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.
2. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மூலம், முழுமையாக கட்சி ஈபிஎஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சட்ட ரீதியாக அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட்டதால், கட்சி வளர்ச்சி பணிகளிலும், எதிர்வரும் தேர்தலுக்கான பணிகளிலும் மா.செக்கள் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது.

3. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இருவரும் அண்மையில் சந்தித்த நிலையில், இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட இருப்தாக அறிவிக்கப்பட்டது. இதனால், தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என விமர்சித்தார்.
இந்நிலையில், நாளை மாலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரனை - ஓபிஎஸ் சந்தித்துப் பேசியது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
4. மேலும் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது உறுப்பினர் சேர்க்கை பணிகள் எந்த அளவில் உள்ளது எனக் கேட்டு, உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

5. மேலும், 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் பூத் கமிட்டி அமைப்பதற்கும் மாவட்ட செயலாளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
6. ஓபிஎஸ் சார்பாக திருச்சியில் மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்காக 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த இடத்தில் மாநாடு நடத்துவது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications