7 சம்பவம்.. ஸ்டாலின் உடனே எடுத்த முடிவு.. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வந்தது எப்படி? பின்னணி
சென்னை: 7 முக்கியமான காரணங்களுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். இன்று நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படும்.

துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு வந்தால் மட்டும் போதுமானது. அதாவது அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது. நேற்று ஆளுநர் மாளிகை இதை பற்றி செய்தி குறிப்பாக வெளியிட்ட நிலையில், இன்று அரசு அறிவிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார். முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்ததற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி புதுச்சேரியுடன் சேர்த்து 40 இடங்களில் வென்றது. பாஜக, அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் திமுகவில் இளம் ரத்தத்தை பாய்ச்சல் அந்த கட்சி முடிவு செய்துள்ளதாம். இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் வியூகங்கள் ஆளும் திமுகவிற்கு சாதகமாக அமைந்தன. லோக்சபா தேர்தல் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
2. அதற்கு முன் சட்டசபை தேர்தலிலும் வேட்பாளர் தேர்வு தொடங்கி பல விஷயங்களில் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக தலையிட்டார். கட்சியில் அவர் எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு சாதகமாக மாற தொடங்கி உள்ளன. அந்த வகையில்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலுக்கு பின் ப்ரோமோஷன் கொடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளாராம்.
3. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற போது ஆட்சி நிர்வாகத்தை உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக கவனித்துக்கொண்டார். முக்கியமாக அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார்.
4. ஃபார்முலா 4 கார் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறார். எந்த விதமாக பெரிய அசம்பாவிதமும் இல்லாமல்.. முறையான திட்டமிடலுடன், எப்.ஐ.ஏ. சான்று பெற்று.. தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்தி காட்டி உள்ளது. பெரிய சட்ட போராட்டத்திற்கு பின்பே இதை அவர் நடத்திக்காட்டினார்.
5. அமைச்சர்களை.. முக்கியமாக சீனியர்களை தனது குடைக்கு கீழ் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்துவிட்டார். எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சீனியர்கள் தனது பேச்சை கேட்கும் அளவிற்கு உதயநிதி மாற்றி உள்ளார்.
6. எய்ம்ஸ் செங்கல் விஷயத்தை தேசிய அளவில் கொண்டு சென்றது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான். இது பாஜகவிற்கு பெரிய அழுத்தமாக மாறியது.
7. அதேபோல் சனாதன ஒழிப்பு என்ற பிரயோகத்தை பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் கொண்டு சென்றதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான்., ஆகிய 7 முக்கியமான காரணங்களுக்காகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications