துள்ளிக்கொண்டு செல்லும் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் வேலைகள்… இவ்வளவு வசதிகளா?
சென்னை: மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது ஜல்லிக்கட்டு ஸ்டேடியம். வேகமாக நடைபெற்றுவரும் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு சென்று பார்வையிட்டிருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு 'லேண்ட் மார்க்' கிடைக்கும். சென்னைக்கு அப்படித்தான் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணா மேம்பாலம் கிடைத்தது. அதுவரை ஜெமினி நிறுத்தம் என மக்களால் அழைக்கப்பட்டுவந்த அந்த அடையாளம் மாறி அண்ணா மேம்பால நிறுத்தம் உருவானது.

அதைப்போலச் சென்னைக்கு மற்றொரு அடையாளமாக வள்ளுவர் கோட்டம் கிடைத்தது. பிறகு அண்ணா நூற்றாண்டு நூலகம். இப்படி சென்னையை மட்டும் மையமாக வைத்து இந்தப் புதிய அடையாளங்களை திமுக ஆட்சி உருவாக்கவில்லை.
மதுரை மண்ணிற்கு புதிய அடையாளம்:
அதுவரை இலக்கியத்தில் மட்டுமே படித்துவந்த பூம்புகாருக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கினார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. அவருக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தன் ஆட்சிக்காலத்தில் அசைக்கமுடியாத பல புதிய அடையாளங்களைத் தமிழ்நாட்டில் கட்டி எழுப்பி இருக்கிறார்.

அதுவும் இரண்டே ஆண்டு ஆட்சிக்காலத்தில். சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதைப்போல் திருவாரூரில் கலைஞர் கோட்டம் என்ற புதிய அடையாளத்தைக் கட்டித்தந்துள்ளார். அதைக் கடந்து மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தென் மாவட்ட மக்களின் 'லேண்ட் மார்க்' அடையாளமாக மாறி இருக்கிறது. அதைத் திறந்துவைத்த 100 நாள்களில் இரண்டரை லட்சம் மக்கள் வந்து பார்வையிட்டுப் பயன்படுத்திச் சென்றுள்ளனர்.

இப்போது அதன் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு என்று தனி ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.
முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்ததைப் போலவே அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுவதற்காக பணிகள் ஏறக்குறையை முக்கால்வாசி முடிந்துவிட்டன.
கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அதற்குள் பாதி வேலைகள் முடிந்து பாதி ஸ்டேடியம் பார்வைக்குக் கிடைத்துவிட்டது.

அரங்கத்தின் நுழைவாயிலில் 4 பிரம்மாண்ட தூண்கள் எழுந்து நிற்கின்றன. இதைப் போன்று மூன்று நுழைவாயில்கள் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அரங்கத்திற்கு முன்னதாக வாகனங்களை நிறுத்துவதற்கான மிகப் பெரிய வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டு அங்கே அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
வருகின்ற மக்களின் குடிநீர் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி ஒன்றைக் கட்டித் தந்துள்ளனர். அதன் அருகே போட்டிக்கான காளைகளைக் கட்டிவைப்பதற்காக ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே 4500 பேர் அமைந்து ரசிக்கலாம்!
அப்படியே அதன் வழியே காளைகள் மைதானத்திற்கு வரிசையாக வருவதற்காக வழி செய்து தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தரமான கூரைகளால் அமைக்கப்பட்டு வருகின்றன. கூரைகள் அமைப்பதற்காக இரும்புக் கம்பிகள் தற்போது புதைக்கப்பட்டு, அதற்கான கான்கிரீட் அமைக்கும் பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன.

இதைக் கடந்து ஸ்டேடியத்திற்கு உள்ளே சென்றால் கீழே கிட்டத்தட்ட 800 பேர் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்பதற்கான இருக்கைகள் அமைப்பதற்கான தளம் போடும் வேலைகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு மேலாக உள்ள முதல் தளத்தில், அதாவது டயர் ஒன் தளத்தில் 1500 பேர் வரை மிகத் தாராளமாக உட்காரலாம்.
அப்புறம் தான் தரமான சம்பவம் காத்திருக்கிறது. இரண்டாம் தளத்தில் 2200 பேர் வரை உட்கார்ந்து போட்டியை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். அந்தளவுக்கு இடநெருக்கடி இல்லாமல் இந்த மைதானம் எதிர்காலத் தேவையை மனதில் வைத்துக் கட்டப்பட்டு வருகிறது. எப்படிப் பார்த்தாலும் ஆக மொத்தமாக இந்த மைதானத்தில் மொத்த கொள்ளளவு 4500 பேர் வரை அமரக்கூடியதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 66 ஏக்கர் நிலத்தில் 16 ஏக்கரில் இந்த மைதானம் அமைந்துள்ளது. கீழ்த்தளத்தில்தான் அட்மின் ஆபீஸ் மற்றும் வாடிவாசலை அடுத்து மீடியாக்களுக்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது ரிஜிஸ்ட்ரேஷன் ரூம் மற்றும் மியூசியம் அதே பகுதியில் கடைகள் லாக்கர் அறை டார்மெட்ரி கூட அமைந்துள்ளது.

மேலே நாம் முன்பே குறிப்பிட்ட டயர் ஒன் பகுதிக்குப் பின்புறம் விஜபி சூட் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே சாப்பாட்டு அறையும் டார்மெட்ரியும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னால் வெறும் செம்மண் தரையாகக் காட்சி அளித்த இடத்தில் ஸ்டேடியம் நிமிர்ந்து நிற்கிறது. கிட்டத்தட்ட ரூ.44.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
டயர் டு தளத்தில் ஸ்டோர் ரூம் ஒன்றும் உபகரணங்களை வைப்பதற்கான எக்யூப்மென்ட் ரூம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் மாடி மீது இருந்து பார்க்கும்போது விறுவிறுப்பாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மட்டும் கண்ணுக்குத் தெரியப்போவதில்லை. சுற்றிலும் உள்ள பசுமையான மலையும் குளிர்ச்சியான இயற்கைக் காட்சியைக் கூட சேர்த்தே தெரியும் என்பது கூடுதல் சிறப்பாகச் சொல்லலாம்.
அலங்காநல்லூரில் இனி ஜல்லிக்கட்டு நடக்காதா?
இந்த மைதானம் வந்துவிட்டால், காலங்காலமாக நடைபெற்று வரும் அலங்காநல்லூர் அவனியாபுரம் போன்ற பாரம்பரிய மைதானங்களில் இனி ஜல்லிக்கட்டு நடைபெறாதா? என்று சிலருக்குச் சந்தேகம் வரலாம். அதுதான் இல்லை. காலங்காலமாக நடக்கும் அந்தப் போட்டிகள் வழக்கம் போலவே நடைபெறும். அதற்கு எந்தவித தடைகளும் இல்லை.
ஆனால், அந்தப் போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் கூடுதலாக இங்கே புதியதாக நடைபெறும்போட்டிலும் கலந்துகொள்ளலாம். இதனால் கூடுதலாக சில பரிசுகளை அவர்கள் வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேறு சிலருக்கு இன்னொரு கேள்வியும் வரலாம். வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்த பிறகு, இந்த மைதானம் சும்மா பூட்டிவைக்கப்படுமா? என்று. அதுதான் இல்லை.
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமே இங்கு நடக்கப்போவதில்லை. இது ஒரு பொது மைதானம். இங்கு ஆண்டுதோறும் கபடி, ஃபுட்பால் போன்ற பல போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். அதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் காலங்களில் மட்டும் ஜல்லிக்கட்டுக்கு வழி விட்டு வேறு போட்டிகள் நிறுத்திவைக்கப்படும். ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்த மைதானம் பலவிதமான விளையாட்டுப் போட்டிகளின் களமாகவே உருவாக்கிவருகிறது.
சரி, சரி, மொத்த வேலைகளும் எப்போது முடியும்? என்றுதானே யோசிக்கிறீர்கள்? ஆரம்பிக்கப்பட்ட 9 மாதங்களில் இந்தளவுக்கு முழுமை பெற்றுள்ள இந்த ஸ்டேடியத்தின் முழு வேலையையும் வரும் டிசம்பர் 17க்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அப்படி முடித்தால்தானே ஜனவரி பொங்கல் அன்று இங்கே ஜல்லிக்கட்டுப் போட்டியை உட்கார்ந்து ரசிக்க முடியும்?












Click it and Unblock the Notifications