புதிய உறுப்பினர் அட்டை.. விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. மா.செக்கள் கூட்டத்தில் முடிவு!?
ஈபிஸ் தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்தது.
சென்னை : எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ள சூழலில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், பல மாதங்களாக நடந்த வழக்கைத் தொடர்ந்து சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு ஓபிஎஸ் தீர்வு பெறலாம் என உத்தரவிடப்பட்டது.

அதிமுக தோல்வி
இந்நிலையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். இது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

பாஜக டூ அதிமுக
மேலும், அதிமுக - பாஜக இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது. பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் பலர் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதையடுத்து, கூட்டணி கட்சியில் இருந்தே ஆட்களை இழுப்பதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

4 விஷயங்கள்
இத்தகைய சூழலில், இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார் எடப்பாடி பழனிசாமி. இக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, ஓபிஎஸ் தொடர்ந்துள்ள புதிய வழக்கை எதிர்கொள்வது, பொதுச் செயலாளர் தேர்தல், பாஜக கூட்டணி விவகாரம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறுப்பினர் அட்டை
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை விரைந்து அறிவிப்பது என இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பு ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் இணைந்திருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர்ம, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மட்டும் உள்ள உறுப்பினர் அட்டைகளை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்குவது பற்றி மா.செக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

மீண்டும் நாளை
முன்னதாக நேற்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையை விமர்சித்திருந்தனர். இன்று மா.செக்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications