ஆர்டர் + அசைன்மென்ட்.. வியூகம் அமைக்கும் எடப்பாடி.. மா.செக்கள் கூட்டத்திற்கு பின்னணி இதுதானாம்! ஓஹோ!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்ற கையோடு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அப்போது என்னென்ன விஷயங்கள் விவாதிக்கடும் என அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்தன.
பாஜக தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியமான ஆர்டரை போட இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. பாஜகவை விமர்சிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட உள்ளதாம்.
ஓபிஎஸ், தினகரன் பக்கத்தில் இருந்து முக்கிய புள்ளிகளை வேட்டையாடவும், தென் மாவட்டங்களில் தேர்தல் வியூகங்களை பலப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாம்.

பொதுச் செயலாளர் பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்த வழக்கை கடந்த மார்ச் 28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது. தீர்ப்பு வெளியானதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக முதல் அறிவிப்பை வெளியிட்டார். அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-அம் தேதி முதல் வங்கப்படும் என அறிவித்தார்.

முதல் கூட்டம்
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7-ஆம் தேதி மாலை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இதுவாகும். இதில் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன என அதிமுகவினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும் என்பது பற்றி அதிமுக வட்டாரத்தில் சில தகவல்கள் கசிந்துள்ளன.

பாஜக உறவு
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள நிலையில், பாஜகவுடன் இணக்கமாகச் சென்றால் தான் ஓ.பன்னீர்செல்வம் மூலம் தனது பதவிக்குச் சிக்கல் வராது என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையத்தால் தான் பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்படும் வரை பாஜகவுடன் சுமூக உறவையே மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். அது பற்றி இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தற்போதே தொடங்க வேண்டும் என நினைக்கிறார் ஈபிஎஸ். மறுபுறம் மாவட்ட வாரியாக அதிமுகவின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதையொட்டி 7ஆம் தேதி நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் பிரிந்து போன அதிமுக புள்ளிகளை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டார்கெட்
தற்போது ஓபிஎஸ் அணி பலவீனமடைந்துள்ளதால், இந்த சூழலைப் பயன்படுத்தி முக்கிய தலைகளை இழக்க ஈபிஎஸ் நினைக்கிறாராம். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா மற்றும் பாஜக தரப்பிலிருந்து முக்கியமான நபர்களை அதிமுகவுக்கு கொண்டு வரவும், தென் மாவட்டங்களில், குறிப்பாக ஓபிஎஸின் தேனி மாவட்டம் ஆகியவற்றில் வெற்றிக்கான வியூகங்களைப் பலமாகப் போட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ராயப்பேட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications