2 பிளான்கள்.. "டார்கெட்டே வேற".. அமித் ஷாவை இன்று சந்திக்கும் ஆளுநர் ரவி! கையில் "அந்த" ரிப்போர்ட்?
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர். என் ரவி இன்று சந்திப்பு நடத்துகிறார். டெல்லி சென்றுள்ள ஆளுனர் ஆர். என் ரவி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த 2 நாட்களாக பாஜக அலுவலகம், பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கோவை சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டை வீசியது யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுக்க போலீசார் இதனால் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பலர் இந்த சம்பவம் தொடர்பாக கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆலோசனை
இந்த சம்பவம் தொடர்பாக கோவை, மதுரை, சேலத்தில் தீவிர தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன. மதுரை சம்பட்டி புரத்தை சேர்ந்த உசேன், நெல்பேட்டை சேர்ந்த சம்சுதீன் உள்ளிட்ட மூன்று பேர் மதுரையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருவாரூரில் பேருந்து கண்ணாடிகளை உடைத்த எஸ்டிபிஐ கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமீபத்தில் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டது. ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

ரெய்டு
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில்தான் தற்போது இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இடையில்தான் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர். என் ரவி இன்று சந்திப்பு நடத்துகிறார்.

என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்து ரிப்போர்ட் ஒன்றை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்; அரசியல் லாபங்களுக்காக வன்முறையை தூண்டுபவர்கள் பயங்கரவாதிகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிப்படையாக சாடியுள்ளார். மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கங்கள் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதுதான் ஃபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நோக்கம் என்று ஆளுநர் ரவி வெளிப்படையாக பேசி இருந்தார்.

சட்ட ஒழுங்கு
இந்த நிலையில்தான் இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றுடன் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றுள்ளார். பிஎப்ஐ இயக்கத்தை தடை செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ரிப்போர்ட்டை ஆளுநர் ரவி அளிப்பார் என்று கூறப்படுகிறது. இது போக தமிழ்நாடு அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவர் ஆலோசனை செய்ய உள்ளார் என்கிறார்கள். சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி அமித் ஷாவுடன் 20 நிமிடம் சந்திப்பு நடத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிரான புகார் பட்டியலை அவர் வழங்கினார் என்று கூறப்படுகிறது. திமுகவில் உள்ளவர்கள் மீது இருக்கும் புகார்கள். அவர்கள் எடுத்த டெண்டர் குறித்த விவரங்கள் அடங்கிய லிஸ்டுடன் எடப்பாடி டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்த லிஸ்ட் தற்போது அமித் ஷா கையில் உள்ளது என்கிறார்கள். இந்த லிஸ்ட் குறித்தும் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர். என் ரவி ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications