அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? அப்போ அடுத்து அதுதானா? புஸ்ஸி ஆனந்த் பரபர பேச்சு
சென்னை: நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழையலாம் என்று சொல்லப்படும் நிலையில், இது குறித்து அவரது மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போது டாப் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித்தும் விஜய்யும் தான். இதில் அஜித் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். அவ்வளவு ஏன் ரசிகர் மன்றத்தையே கூட கலைத்துவிட்டார்.

ஆனால், விஜய் அதற்கு நேர்மாறாகவே செயல்பட்டு வருகிறார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியலை நோக்கியே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே திட்டமிட்டு செயல்களைச் செய்து வருகிறார்.
நடிகர் விஜய்: அனைத்து நட்சத்திரங்களுக்கும் ரசிகர் மன்றம் இருப்பது இயல்பான ஒன்று தான். ஆனால், விஜய் அதை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார். மேலும், சமீப காலங்களாகவே அவரது செயல்பாடுகள் அரசியல் வருகையைக் காட்டுவது போலவே இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இது ஏதோ இப்போது தொடங்கியது இல்லை. அவரது தலைவா படமே "Time to Lead" என்ற டேக்கிற்காக சர்ச்சையில் சிக்கியது. படம் ரீலிசாகவே அப்போது பெரிய போராட்டமே நடந்தது அனைவருக்கும் தெரியும்.
அதன் பின்னரும் கூட மெர்சல், சர்கார் என வரிசையாக ஒவ்வொரு முறையும் அவர் படம் ரிலீசாகும் போது சர்ச்சையைக் கிளப்பும். அதேபோல படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனங்களும் இருக்கும். இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு படத்திலும் பாடல் வெளியீட்டு விழாவின் போது, இவரது அனல் பறக்கும் பேச்சுகள் தான் அடுத்த சில நாட்களுக்கு டிரெண்டிங்கில் இருக்கும். அப்படி மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டவர் தான் விஜய்.
மக்கள் இயக்கம்: கடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட இவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர். அப்போதே இவர் தனது படத்தையும் ரசிகர் மன்ற கொடியையும் பிரசாரத்திற்குப் பயன்படுத்த அனுமதி அளித்திருந்தார். இதுவே அவரது அரசியல் என்டரிக்கான தெளிவான ஆதாரம் என்றே பலரும் குறிப்பிட்டனர். மேலும், தேர்தலில் வென்றவர்களைச் சந்தித்து போட்டோவும் எடுத்துக் கொண்டிருந்தார்.
இதனிடையே அடுத்த கட்டமாகச் சமீபத்தில் அவர், தமிழ்நாடு முழுக்க அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தக் கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே அம்பேத்கரை தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
என்ன சொன்னார்: அதன்படி இன்று ஈரோட்டில் இருக்கும் தீரன் சின்னமலை சிலைக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, விஜய் உத்தரவின்படியே தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்று சொல்லப்படும் நிலையில், இது குறித்த கேள்விக்கு, "விஜய் இது குறித்து அறிவிப்பார்" என்று சொல்லி முடித்துக் கொண்டார். இது அவரது அரசியல் என்டரியையே காட்டுவதாகப் பலரும் கூறி வருகின்றனர்.
விஜய் அரசியலில் நுழைவாரா என்பது கேள்வி இல்லை.. அவர் எப்போது அரசியலில் நுழைவார் என்பதே இப்போது கேள்வியாக இருக்கிறது. அதற்கான பதிலை மிக விரைவில் விஜய் அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications