மருத்துவ கட்டமைப்பு.. தமிழகத்தின் புதிய நகர்வு.. தொழில் நிறுவனங்களுடன் ஸ்டாலின் பேசியது என்ன?
சென்னை : கொரோனா நோய்த் தொற்று நிவாரண நடவடிக்கை தொடர்பாகத் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் ப்ளோமீட்டர்கள்., கிரையோஜெனிக் டேங்க்ஸ் / ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றை தயாரிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்ச கட்டமாகி வருகிறது. இந்தியாவிலேயே நேற்று தமிழகத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க விரும்புகிறது.
கொரோனா நோய்த் தொற்று நிவாரண நடவடிக்கை தொடர்பாகத் தொழில் நிறுவனங்களுடன் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் வந்திருந்தனர்.

தொழிலை பாதிக்கும்
இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எங்கள் அழைப்பினை ஏற்று இக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கும் தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளே! மற்றும் அரசு அதிகாரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான இக்காலகட்டத்தில் நீங்களும் உங்கள் தொழிலாளர்களும், குடும்பத்தாரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையானது நமது மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்பதை அறிவோம். இந்த அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து போர்க்கால அடிப்படையில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராது இப்பணியில் முழு முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஊரடங்கு; எனினும் ஊரடங்கு என்பது ஒரு தீர்வு அல்ல! ஏனென்றால், அது பலரது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதித்துவிடும்.

தொழிலுக்கு அனுமதி
எனவேதான், தொடர் உற்பத்தி நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் விநியோகிப்பாளர்கள், ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இயங்க அனுமதித்துள்ளோம். இத்தகைய நிறுவனங்கள் எவ்வித சிரமுமின்றி இயங்க ஏதுவாக அவற்றின் தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பணிக்குச் சென்றுவர இ-பதிவு முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்.

சிரமங்கள் குறையும்
உங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் களைவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய Helpline சேவையும் தொழில் வழிகாட்டி மையத்தில் (GuidanceBureau) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதென்பதை அறிந்து மகிழ்கிறேன். தொழிற்சாலைகளை இயக்கும் அதே நேரத்தில், உங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதும் மிகவும் முக்கியமான கடமையாகும் என்று தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழகத்தின் தேவை
இந்தக் கொரோனா பெருந்தொற்றானது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மீது ஒரு பெரும் அழுத்தத்தை உண்டாக்கி உள்ளது. இருப்பினும், நம் மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் அனைத்து முன்களப் பணியாளர்களும் இதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் போன்றவற்றின் தேவை பலமடங்கு உயர்ந்திருக்கின்றன. அவற்றைப் பெற்று விநியோகம் செய்வதில் இந்த அரசு தீவிர அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு தற்போது நாளொன்றுக்கு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பு அளவை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மூன்று ஆக்சிஜன் நிலையங்கள் மூலம் 15 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சிப்காட் மூலம் சுமார் 7500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன.

மினி ஆக்சிஜன் உற்பத்தி
சிப்காட் நிறுவனம் இதுவரை 500 சிலிண்டர்களை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாகக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் 1650 சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்படுகின்றன. மேலும் CII மற்றும் Samsung போன்ற நிறுவனங்கள் மூலமாக சுமார் 500 சிலிண்டர்கள் நம் மாநிலத்திற்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இம்மாநிலத்தின் தொழில் நிறுவனங்களின் மூலம் 13 மினி ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துடன் இணைந்து DRDO அமைப்பு 142 மினி ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறது. தமிழ்நாடு அரசு தற்போது இப்பணிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

ஸ்டாலின் வேண்டுகோள்
இது தவிர 3.5 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. சிக்கலான இக்காலகட்டத்தில் அரசோடு தோள் கொடுத்து நிற்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்நோய்த் தொற்றிலிருந்து மக்கள் மீண்டெழ, நீங்கள் அனைவரும் உங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அரசின் முயற்சிகளில் உங்களுக்கு ஏதுவான ஒன்றினை நீங்கள் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் பங்களிப்பை வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். உங்களது CSR முன்னெடுப்புகளில் இதற்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்வது சிறப்பாக இருக்குமென்றும் கருதுகிறேன். குறிப்பாக:
(1) ஆக்சிஜன் செறிவூட்டிகள்
(2) ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்
(3) ஆக்சிஜன் ப்ளோமீட்டர்கள்
(4) கிரையோஜெனிக் டேங்க்ஸ் / ஆக்சிஜன் சிலிண்டர்கள்.

முதல்வர் வேண்டுகோள்
இதைத் தவிர, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும், தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன். தற்போது இந்த நிதிக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் (TNMSC), SIPCOT மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை மேற்கொள்ளும் கொள்முதல்களின் செலவினங்களை நேரடியாக அந்தந்த விற்பனையாளர்களுக்கு நீங்கள் செலுத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பல உயிர்களைக் காக்கவும், இந்த நோயிலிருந்து நமது மக்களை மீட்கவும் பேருதவியாக இருக்குமென்பதை சுட்டிக்காட்டி, உங்கள் பங்களிப்புக்கு முன்னதாகவே நன்றி கூறி என் உரையை முடிக்கிறேன். நன்றி! வணக்கம்!" ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications