மீட்டிங்கில் வந்ததே கோபம்.. "அந்த" வார்த்தையை கூட சொல்லாத எடப்பாடி.. அப்போ பாஜக.. அவ்வளவுதானா?
அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தன் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார்.
சென்னை: அதிமுக பாஜக இடையிலான உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
அதிமுக பாஜக இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. பாஜக நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவிற்கு தாவியதால் பாஜகவினர் கடுப்பில் உள்ளனர். அண்ணாமலை உள்ளிட்டோர் நேரடியாக அதிமுகவை விமர்சனம் செய்துள்ளனர்.
அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தன் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார். அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம்
இதற்கு பதிலடி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி, வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு 'சீட்' வாங்கிக் கொடுங்கப்பா! இத்தனை நாட்கள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது. அ.தி.மு.க., தொண்டர்கள் கோபப்பட்டால், பா.ஜ. க, தாங்காதுன்னு ஜெயக்குமார் அண்ணன் சொல்லியிருக்காங்க. இந்தக் கோபம் ஈரோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மேல வரலையே அண்ணா!, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மீட்டிங்
இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக மோதல்களுக்கு இடையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோபமாக பேசிய எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறாராம். அதில், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது. இனி கட்சியை வலிமை செய்வதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். பூத் அளவில் கட்சியை மீட்க வேண்டும். கோஷ்டி தகராறு காரணமாக இத்தனை நாட்கள் கட்சி வலிமை இழந்து காணப்பட்டது. இனி அந்த நிலைமை நீடிக்க கூடாது. நாம் வலிமையாக இருக்க வேண்டும்.

ஈரோடு
ஈரோடு கிழக்கில் தோல்வி அடைந்தது பிரச்சனை இல்லை. ஆனால் நாம் மிக மோசமாக தோல்வி அடைந்து இருக்கிறோம். அதுதான் பிரச்சனை. அப்படி என்றால் நம் வாக்கு வங்கி மோசமாகிவிட்டது என்று அர்த்தம். அதை மீட்டு எடுக்க வேண்டும். அதற்கான பணிகளை மாநிலம் முழுக்க தொடங்க வேண்டும். நாம் ஒற்றை தலைமைக்கு கீழ் மீண்டும் வந்துவிட்டோம். இதனால் கட்சி வலிமை அடைந்து உள்ளது. அதனால் பலர் நம்முடன் சேர ஆசைப்படுகிறார்கள். கூட்டணி பற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் .

கூட்டணி
கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுப்போம். அதிமுகவின் கூட்டணி தொடருமா தொடராதா என்று இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை. தேர்தலுக்கு 2-3 மாதங்களுக்கு முன் முடிவு எடுத்துக்கொள்ளலாம். அதுவரை அமைதியாக இருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாராம். இதனால் இப்போதைக்கு கூட்டணி விவகாரத்தில் அதிமுக எந்த முடிவையும் எடுக்காது என்கிறார்கள். அதோடு இந்த பேச்சில் அவர் பாஜக என்ற வார்த்தையை ஒரு முறை கூட பயன்படுத்தவில்லையாம். முழுக்க முழுக்க அதிமுக விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தி அவர் பேசி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications