தம்பி அவருக்காக நீங்க ஏன் வருத்தம் சொல்றீங்க? விஜயிடம் எடப்பாடி பேசியது என்ன? கசிந்த சீக்ரெட்!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை பற்றி புஸ்சி ஆனந்திடம் ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ பொதுவெளியில் ரிலீஸாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஆதவ்வை கடிந்து கொண்ட விஜய், உடனடியாக வருத்தம் தெரிவிக்கச் சொன்னார். ஆதவ்வும் வருத்தம் தெரிவித்தார்.
ஆதவ் தனது வருத்தத்தில், என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.
எடப்பாடி பேசினாரா?
இது தொடர்பாக பேசிய எடப்பாடி, ஆதவ் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இது குறித்து என்னிடம் விஜய் பேசவில்லை " என்று தெரிவித்தார். ஆனால், எடப்பாடியிடம் விஜய் பேசியதையும் அவரிடம் விஜய் வருத்தம் தெரிவித்ததையும் உறுதிப் படுத்துகின்றனர் த.வெ.க. மூத்த நிர்வாகிகள். இது குறித்து விசாரித்த போது நம்மிடம் பேசிய அவர்கள், " தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் ஆதவ் நியமிக்கப்பட்டப்பிறகு, நாம் இல்லையெனில் த.வெ.க. வில் தேர்தல் பொறுப்புகளை கையாள யாரும் இல்லைங்கிற மெதப்பு அவருக்கு வந்துவிட்டது.

அதனால்தான், தனக்குத் தோன்றியதெல்லாம் பேசுகிறார். எதிரில் என்ன நடக்கிறது ? யார் இருக்கிறார்கள்? என்பது பத்தியெல்லாம் அவர் கவலைப்படுவதில்லை. அது மாதிரி அலட்சியமாக இருந்ததன் விளைவு தான் நடந்த சம்பவம். இன்னும் சொல்லப்போனால் அந்த வீடியோவை ரிலீஸ் செய்ததே ஆதவ்வின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பில் இருப்பவர்கள்தான்ங்கிற பேச்சும் கட்சியில் இருக்கிறது. இந்த நிலையில், சர்ச்சையை உருவாக்கிய ஆதவ்வின் பேச்சின் வீடியோவையும், அது குறித்து அதிமுகவினரின் கண்டன விமர்சனங்களும் விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
தொடர்புடன் இருக்கிறார்
இதனை, அதிமுகவுடன் இப்போதும் நல்ல தொடர்பில் இருக்கும் த.வெ.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவர் தான் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். ஆதவ்வின் பேச்சைக் கேட்ட விஜய்க்கும் கோபம் வந்திருக்கிறது. உடனே ஆதவ்வை தொடர்பு கொண்டு மிக கடினமாக கடிந்து கொண்ட விஜய், வருத்தம் தெரிவித்து அறிக்கைக் கொடுங்கள்; அதுவும் உடனடியாக செய்ய வேண்டும். அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதை தவிர்க்க வேண்டும் என கட்டளையிட்டார் விஜய். ஆதவ் வருத்தமும் தெரிவித்தார். அதேசமயம், ஆதவ்வை கடிந்து கொண்டாலும் விஜய் சமாதானமாகவில்லை.
மொபைல் போன்
அதிமுகவுடன் தொடர்பில் இருக்கும் தனது கட்சியின் அந்த நிர்வாகியின் மொபைல் ஃபோனிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசினார் விஜய். அப்போது, ஆதவ்வின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. அவரை கண்டித்திருக்கிறேன். அவரது பேச்சுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்னு விஜய் சொல்ல, அவருக்காக நீங்க எதுக்கு வருத்தம் சொல்றீங்க.
அதெல்லாம் வேணாம் தம்பி. அரசியலில் இது மாதிரி நிறைய விசயங்களை பார்த்திருக்கேன். இதெல்லாம் என்னை ஒன்னும் செய்திடாது. உங்க அறிக்கையெல்லாம் பார்க்கிறேன். அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்றீங்கன்னு பாராட்டி பேசியிருக்கிறார் எடப்பாடி. ஆனா, விஜய் தம்மிடம் பேசினார்னு எடப்பாடி சொன்னால் அதை வைத்து ஏதேதோ எழுதுவார்கள்னு நினைச்சித்தான், விஜய் என்னிடம் பேசவில்லையென அவர் சொன்னார்" என்று விவரிக்கின்றனர் விபரமறிந்த த.வெ.க.வினர்.












Click it and Unblock the Notifications