பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
சென்னை: தேசிய அளவில் பாஜக திடீரென தனது பிரச்சார தொனியை மாற்றி உள்ளது. பாஜக இப்படி பிரச்சார தொனியை மாற்ற அவர்களுக்கு கிடைத்த ஒரு உளவு ரிப்போர்ட்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலின் இரண்டாம் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று 2ம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. கேரளாவில் 20 தொகுதி உள்ள நிலையில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது.
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவை தவிர கர்நாடகாவில் 18 தொகுதி, ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் தலா 8 தொகுதி, மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
பீகார், அசாமில் தலா 5 தொகுதிகள், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தலா 3 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 88 தொகுதகிளில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரச்சார ஸ்டைலை மாற்றிய பாஜக: இந்த லோக்சபா தேர்தலில் முதல் கட்டம் போல இல்லாமல் இரண்டாம் கட்டத்தில் பாஜக தனது ஸ்டைலை மாற்றியது. பிரதமர் மோடி அடிக்கடி மத ரீதியாக பேச தொடங்கினார். இஸ்லாமியர்கள் தொடர்பான கருத்துக்களை பேச தொடங்கினார். முக்கியமாக பாஜகவின் வாக்குறுதி பற்றி பேசாமல்.. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்து கடுமையாக பேசினார்.
இந்துக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க போகிறார்கள்.. இஸ்லாமியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு கொடுக்க போகிறார்கள்.. இந்து பெண்களின் தாலியை அறுக்க போகிறார்கள் என்றெல்லாம் மோடி பேச தொடங்கி விட்டார்.
அமித் ஷா, யோகி ஆதித்யாநாத் ஆகியோரும் இதை தீவிரமாக பேச தொடங்கிவிட்டனர். இந்த பிரச்சாரத்தையே இஸ்லாமியர்கள் - இந்துக்கள் என்று மாற்றிவிட்டனர். இந்த பிரச்சாரம் பாஜகவிற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டாலும்.. இந்த பிரச்சாரம் மூலம் பாஜக லைம்லைட்டிற்கு மீண்டும் வந்துள்ளது என்னவோ உண்மை:
பாஜக ரிப்போர்ட்: பாஜக இப்படி பிரச்சார தொனியை மாற்றுவதற்கு பின் முக்கியமான ஒரு உளவு ரிப்போர்ட்தான் காரணம் என்கிறார்கள். பொதுவாக ஆட்சியில் இருக்கும் கட்சி அது மாநில கட்சியாக இருந்தாலும்.. தேசிய கட்சியாக இருந்தாலும் கூட அவர்கள் உளவுத்துறை மூலம் தேர்தல் ரிப்போர்ட்களை பெறுவது வழக்கம்.
தேர்தலுக்கு முன் கணிப்பு, தேர்தலுக்கு பின் கணிப்பு என்றெல்லாம் உளவு ரிப்போர்ட்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில்தான் பாஜகவிற்கு முதல் கட்ட தேர்தலுக்கு பின் முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாம்.
அதில் முதல் கட்ட தேர்தல் நடந்த தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையாக பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக ரிப்போர்ட் சென்றுள்ளதாம். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பெரும்பான்மை தொகுதிகளில், கடுமையாக பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டதாக ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
அதன் அடிப்படையிலேயே பாஜக கேம்பில் பதற்றம் தொற்றியதாக கூறப்படுகிறது. முக்கியமாக முதல் கட்ட தேர்தலில் இழந்ததை இரண்டாம் கட்ட தேர்தலில் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருந்துள்ளதாம். முதல் கட்ட ரிப்போர்ட்கள் சரியாக வராததே பாஜகவின் பிரச்சார தொனி மாற்றப்பட்டதற்கும் காரணம் என்கிறார்கள் தாமரைக்கு நெருக்கமான தலைவர்கள்.












Click it and Unblock the Notifications