அதிமுக - தவெக கூட்டணி.. பி.கே சொன்ன ஐடியா.. மாஸ்டர்மைண்டே ஆதவ்தான்.. விஜய் சொன்ன அந்த பதில்
சென்னை: பிரசாந்த் கிஷோர்-விஜய் சந்திப்பு, ஆலோசனை ஆகியவைதான் கடந்த 3 நாட்களாக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தின. விஜய் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளராக பி.கே. நியமிக்கப்படவிருக்கிறார் என செய்திகள் பரவின.
பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. பிகே இப்போது ஐபேக்கில் இல்லை. இதனால் அவர் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக வர மாட்டார். ஐபேக்கும் வராது. (ஐபேக் திமுகவிடம் மீண்டும் செல்வதாக பேச்சு உள்ளது)

இதனால் பிகே விஜய்க்கு வேலை செய்ய மாட்டார். மாறாக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு உதவலாம். மக்கள் நீதி மய்யம் உருவாக்கப்பட்ட போது அதற்கு பிகே பணிகளை செய்துள்ளார். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படையை உருவாக்க இவரை அழைக்கலாம்.
விஜய் மாநிலம் முழுக்க யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதற்கான திட்டங்களை வகுக்கலாம், என்று கூறப்பட்டது.
விஜய் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு முக்கிய தகவல்
இந்த விவகாரத்தில் தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விசாரித்தபோது, "த.வெ.க. தனித்துப் போட்டியிட வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும், கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் விரும்புகின்றனர். அதற்கேற்பத்தான், விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அவரிடம் இவர்கள் இருவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதாவது, விஜய் தனித்து போட்டியிட வேண்டும் என திமுகவின் திட்டம். அரசுக்கு எதிரான அதிர்ப்தி வாக்குகள் சிதறவேண்டும், திமுக கூட்டணி உடைந்து விடக்கூடாது என்பதால் தான் விஜய் தனித்துப்போட்டியிட திமுக திட்டமிடுகிறது. அதனைத்தான் புஸ்ஸியும் ஜானும் செயல்படுத்துகின்றனர். ஆனால், த.வெ.க.வில் இணைந்து தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் பொறுப்பைப் பெற்றுள்ள ஆதவ் அர்ஜூனா, த.வெ.க.வை பெரிய அளவில் வெற்றிபெற திட்டமிடுகிறார்.
அவரை பொறுத்தவரை திமுக ஆட்சியை வீழ்த்தி, திமுக தலைமையை பழி வாங்கவேண்டும் என்பது அதீத ஆசை. அது, நிறைவேறவேண்டுமெனில், விஜய் தனித்துப் போட்டியிடக்கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே ஆதவ்வின் திட்டம். இதற்கு, புஸ்சியும் ஜானும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். இதனை விஜய்க்கு வெளிப்படுத்தி, எதார்த்த அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு உணர்த்த, நாம் மட்டும் போதாது என திட்டமிட்டு பிரசாந்த் கிஷோரை விஜய்யுடன் சந்திக்க வைத்திருக்கிறார் ஆதவ். இவரை பொருத்தவரையில், அதிமுக-தவெக கூட்டணி உருவாக விஜய் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு, அதிமுகவுக்கும் விஜய்யுக்குமான தூதராக பி.கே. இயங்குவார் என்ற அளவில் இந்த சந்திப்பு நடந்தது" என்று ஆதவ் அர்ஜுனா தரப்பிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
மேலும், ''விஜய்யுடன் தனித்து சந்தித்த பி.கே., 'திமுகவை வீழ்த்துவதுதான் உங்கள் லட்சியமெனில் அதிமுகவுடன் கூட்டணி வையுங்கள். தனித்துப் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளை உங்கள் கட்சி வாங்கலாமே தவிர, வெற்றிக்கான உத்தரவாதம் கிடையாது. வெற்றியில்லாத எவ்வளவு வாக்குகள் வாங்கினாலும் அதில் பலனில்லை. ஒருவேளை, நீங்கள் தனித்து போட்டியிட்டு, திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டால் அடுத்த 5 வருடத்தில் உங்கள் கட்சியை சின்னாபின்னமாக்கி விடுவார்கள் திமுகவினர்' என்றெல்லாம் யோசனை தெரிவித்திருக்கிறார் பி.கே. !
இதனை உள்வாங்கி கொண்ட விஜய், ஆலோசிக்கிறேன் என சொல்லியிருக்கிறார். இதனையடுத்தே, புஸ்சி மற்றும் ஜானுடனான ஒரு ஆலோசனையையும் பி.கே. நடத்தினார். புஸ்சி, ஜானுடனும் நடந்து முடிந்துள்ள அந்த ஆலோசனையிலும், விஜய்யிடம் சொன்ன அதே கருத்தத்தைத்தான் விவரித்திருக்கிறார் பி.கே. ! அந்த சந்திப்பு ஆரோக்கியமாக முடிந்துள்ளது" என்கிறார்கள். இதற்கிடையே, எடப்பாடியை பி.கே. சந்திக்கவிருக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகு நிறைய மாற்றங்கள் தமிழக அரசியலில் நடக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications