ஆதீனத்தை அசிங்கப்படுத்துவோம்.. கழுத்தை நெரித்து மிரட்டிய பாஜக நிர்வாகி.. கலங்கிய தருமபுரம் மடம்!
சென்னை: தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியரை மிரட்டி பணம் கேட்ட பாஜக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேரை மயிலாடுதுறை மாவட்ட போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக போலீஸ் பதிவு செய்துள்ள எப்ஐஆரில், விருத்தகிரி என்பவர் ஆதீனம் சார்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. தருமபுரம் ஆதினம் தலைமை பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் சகோதரனும் உதவியாளருமாக விருத்தகிரி பணியாற்றி வருகிறார். ஆதீனம் சார்பாக அவர் அளித்த புகாரில்

கடந்த சில நாட்களாக ஆடுதுறையை சேர்ந்த பாஜக நிர்வாகி வினோத் என்பவர் செல்போன் எண்ணிலிருந்து, எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக தொடர்பு கொண்டும் Whatsapp மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தனர் . தன்னிடமும் தலைமை மடாதிபதி சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும் டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதின மடத்தையும் மடாதிபதியையும் அவமானபடுத்தி விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
தனது சார்பில் திருவெங்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி பாஜக நிர்வாகி விக்னேஷ் உங்களிடம் பேசுவார் எனவும் பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால் மேற்படி விக்னேஷ் மூலம் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்ய கூட தயங்கமாட்டோம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெருக்கி கொலை செய்ய முயற்சித்தனர். நான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று தருவதாக தெரிவித்தேன். பின்னர் இது தொடர்பாக கொடியரசு (கலைமகள் பள்ளி நிறுவனர்) மற்றும் செய்யூர் வழக்கறிஞர் ஜெயசந்திரன் திருக்கடையூர் விஜயகுமார் மற்றும் திருவெண்காடு பகுதியை சேர்ந்த பாஜக-மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்டும் தொகையை விரைவில்கொடுக்க வேண்டுமென கூறியதாக கூறினார்கள்.
மேலும் அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்சினை இல்லாமல் விசயத்தை முடிக்குமாறும் வீணா ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் அவர்கள் சொல்வதை செய்ய கூடியவர்கள் எனவும் எங்களை அச்சுறுத்தும் வகையில் மடாதிபதியின் நேர்முக உதவியாளர் செந்தில் அவர்களின் கூட்டோடு மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றார்கள். இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம்.
எனவே காவல்துறை தலைவர் அவர்கள் மடத்தினர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் கேட்டும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் அதை வெளியிட்டு மடத்திற்கும் மடத்தில் உள்ளவர்களுக்கும் கெட்டப்பெயர் உண்டு பண்ணவும் மடத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவதாகவும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் மேற்படி நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பின்னணி: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டியதாக பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் 6 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை யாத்திரைக்கு 20 கோடி கொடுக்க வேண்டும்.. அப்படி கொடுக்கவில்லை என்றால் உங்கள் வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி இந்த பாஜக நிர்வாகிகள் மிரட்டியதாக போலீசார் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபர்கள் குடியரசு, ஆடுதுறை வினோத் (BJP மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர், தஞ்சை வடக்கு மாவட்டம் ), விக்னேஷ் (BJP மாவட்ட செயலாளர் மயிலாடுதுறை மாவட்டம் ) மற்றும் ஸ்ரீனிவாஸ் (BJP முன்னாள் மாநில இளைஞர்அணி செயற்குழு உறுப்பினர், தஞ்சை வடக்கு மாவட்டம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜக மாவட்ட தலைவர் அகோரம், தருமபுரம் ஆதீன ஊழியர் செந்தில், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications