விஜய் என்ன தவறு செய்தார்?.. அவருக்கு துணையா நான் நிற்பேன் - எச்.ராஜா
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ பெரும் விவாதப் பொருளாக மாறியது. அரசியல் கட்சியினர் பலரும் தவெக மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விஜய் என்ன தவறு செய்தார் என்றும், கரூர் விவகாரத்தில் அவருக்கு நான் துணையாக நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கரூர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தவெக மாவட்ட செயலாளர்கள் இருவரை கைது செய்தனர். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது. தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விஜய் என்ன தவறு செய்தார் என்றும், கரூர் விவகாரத்தில் அவருக்கு நான் துணையாக நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கரூர் விவகாரத்தில் விஜய்க்குத் துணையாக நான் நிற்பேன். விஜய் என்ன தவறு செய்தார்?. கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்தது ஒரு குற்றமா?.
பிரச்சாரக் கூட்டத்திற்கு எம்ஜிஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா?. வரும் வழியில் மக்களின் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம். ஆனால் அது ஒன்றும் கிரிமினல் குற்றம் இல்லை. ஆனால் கரூரில் அந்த இடத்தில் அனுமதி கொடுத்த எஸ்.பி.யை முதலில் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
திமுகவின் கரை வேட்டி கட்டாத உறுப்பினர்களாக கரூர் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். பேசுனாலே கைது செய்வீர்களா. அப்படி என்றால் ஒருநபர் கமிஷன் எதற்கு. விஜய்க்கு எப்படி குறுகலான இடம் ஒதுக்கலாம். வேங்கைவயல் சம்பவத்துக்கு திருமாவளவன் நேரில் சென்றாரா. ஆளும் திராவிட அரசுக்கு சொம்படிப்பதை தவிர வேறு வேலையே கிடையாதா அவருக்கு. இதுவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் என்ன செய்திருக்கிறார். திமுகவில் அறிவாலய எடுபிடியாக இருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications