"விஜய் அரசியல்.." வந்து விழுந்த கேள்வி! மழுப்பாமல் வெற்றிமாறன் கொடுத்த நறுக் அட்வைஸ்.. என்ன சொன்னார்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் முதல்முறையாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது. தமிழக அரசியலில் இருக்கும் பல முக்கிய தலைவர்களும் சினிமாவில் இருந்து வந்தவர்களாகவே உள்ளனர். அல்லது சினிமா துறைக்கு எதாவது ஒரு விதத்தில் தொடர்புடையவர்களாகவே உள்ளனர்.

இப்படி சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்கள் லிஸ்டில் அடுத்து நடிகர் விஜய் இருப்பார் என்றே பரவலாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அவரது செயல்பாடுகளும் அரசியலை நோக்கியே இருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசியலுக்கு வரும் விஜய்: தமிழ்நாட்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வென்றனர். அவர்கள் விஜய் மக்கள் இயக்க கொடியைப் பயன்படுத்த அனுமதி அளித்தது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. மேலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அழைத்து விஜய் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்தச் சூழலில் சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவில் 2026 சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு "கப் முக்கியம்" என்று அவர் சொன்னது மேலும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் முதல்முறையாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன்: சென்னையில் உள்ள மெரினா கலங்கரை விளக்கம் அருகில் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.. இந்த கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிமாறன், "இந்த தூய்மை பணியில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் கலந்து கொண்டேன். ஒவ்வொரு நபரிடமும் தனிமனித பொறுப்பு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்போது நகரைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. தூய்மை பணிகள் என்றால் அதை அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும் என நம் ஒதுங்கக் கூடாது. இதில் நமது பங்களிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்றார்.
சினிமா+ அரசியல்: தொடர்ந்து சினிமா மற்றும் அரசியலுக்கு இருக்கும் தொடர்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியலிலும், சமூகத்திலும் சினிமா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் சமீப காலமாக வரும் படங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சமூகத்தில் சினிமா பல நல்லவிதமான உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஜெய் பீம் மாதிரியான படங்களைச் சொல்லலாம். அவை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் வந்த பிறகு அந்த மக்களுக்குப் பல நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளன. இங்கே சினிமா என்பது தொடர்ச்சியாக சமூகத்தில் பல விவாதங்களைத் தொடங்கி வைத்துள்ளது" என்றார்.
என்ன சொன்னார்: விஜய் அரசியல் குறித்துப் பேசிய அவர், "நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகிறார் என்றே நான் நினைக்கிறேன். விஜய் என்று இல்லை அனைவருக்கும் அரசியலில் வர உரிமை இருக்கிறது. விஜய் அரசியலுக்குத் தாராளமாக வரலாம். இதில் நான் கருத்துச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் அதற்கு முன்பு அவர் களத்தில் இறங்கி பணியாற்றியிருக்க வேண்டும்.
முதலில் மக்களுடன் இணைந்து கிரவுண்டில் இருந்து வேலை செய்ய வேண்டும். அப்போது அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை இருக்கிறது.. அரசியல் என்பது எல்லாருக்கும் சவாலான ஒன்றுதான். அந்த சவாலை எதிர்கொள்ளலாம் என்ற மனப்பக்குவம் இருப்போர் மட்டுமே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். வெற்றிமாறனின் இந்த கருத்துகள் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications