திருமாவளவன் எதை சொல்கிறார்.. "பிரிந்தே வாழ்கிறேன்".. அழுகையே அம்மாவின் மொழி.. திரண்ட சிறுத்தைகள்
திருமாவளவனின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகிறது
சென்னை: "நான் தாய்ச்சொல்லைத் தட்டாதவன் தான். அம்மாவின் ஒரே ஒரு அறிவுரையைத் தவிர" என்ற விசிக தலைவர் திருமாவளவனின் ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.
ஒதுக்கப்பட்டு கிடக்கிற சேரிகள் தலைநிமிர்வதே தன்னுடைய ஒரே லட்சியம் என்று உறுதியுடன் அன்று அரசியல் பயணத்தை துவக்கியவர்.. தமிழகத்தில் தற்போது தவிர்க்கவே முடியாத சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறார் திருமாவளவன்..
சாதாரண ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து, லட்சக்கணக்கான விசிக தொண்டர்களின் ஒப்பற்ற தலைவராகவும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் தனிப்பெரும் இயக்கத்தை உருவாக்கி, வெற்றிகரமான அரசியல் தலைவராகவும் இன்று வலம் வருகிறார் திருமாவளவன்.
அதெப்படி பட்டினபிரவேச தடையை நீக்கலாம்? சமூக நீதிக்கு எதிரானது- திமுக மீது விசிக கடும் பாய்ச்சல்
அதிரடி
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அரசியல் சார்ந்த கருத்துக்களை ஆவேசமாகவும், அதிரடியாகவும் பதிவிட்டு வருபவர்.. அந்த பதிவுகள் தமிழக அரசியல் களத்தில் பலமுறை, பலவிதமான தாக்கங்களையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.. சில சமயம் தன்னுடைய அக்கா, அம்மாவை பற்றியும் பதிவுகளை போடுவது வழக்கம்..
அக்கா
அந்தவகையில், கொரோனா தொற்றுக்கு அக்காவை பறிகொடுத்த சமயம், உடைந்துபோயிருந்தார் திருமாவளவன்.. அக்கா பற்றி அடிக்கடி நினைவுகளை பகிர்ந்து கொண்டே இருந்தார்.. அந்த சமயத்தில்தான், திருமாவின் அம்மா டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.. அப்போது, அம்மாவை நேரில் பார்க்க சென்ற திருமாவளவன், அவர் காலை அழுத்தமாக பிடித்து உடல்நலம் விசாரித்தார்.. அது தொடர்பான போட்டோவையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்..
ஆரத்தி எடுத்த அம்மா
"நான் சோர்ந்து போய் வந்தாலும்... தோற்றுப் போய் வந்தாலும்...என்றுமே எனக்கு ஆதரவு கரமாக என்னம்மா" என்ற ஏக்கத்துடன் பதிவிட்டிருந்தார். இதற்கு பிறகு, சட்டசபையில் 4 இடங்களில் வெற்றி பெற்றதும் தன் அம்மாவிடம் சென்று ஆசி வாங்கியதையும், திருமாவுக்கு அம்மா ஆரத்தி எடுத்து மகிழ்ந்ததையும் மறந்துவிட முடியாது. நேற்று அன்னையர் தினம் என்பதால், திருமாவளவன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..
அழுகை மொழி
அதில், "நான் தாய்ச்சொல்லைத் தட்டாதவன் தான். அம்மாவின் ஒரே ஒரு அறிவுரையைத் தவிர. 13 வயது வரையில் அம்மாவோடு இருந்தேன். அதன்பிறகு இதுவரை அம்மாவைப் பிரிந்தே வாழ்கிறேன். எப்போதாவது சிலநிமிடங்கள் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு . அதுவும் கும்பலில் தான். அழுகையே அம்மா என்னுடன் அதிகம் பேசிய மொழி" என்று உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.. அத்துடன், அம்மாவுடன் திருமா உள்ள போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்..
கல்யாணம்
இந்த ட்வீட்டுக்கு சிறுத்தைகள் பலர் திரண்டு கமெண்ட் தந்து வருகிறார்கள்.. "இப்படிப்பட்ட உன்னதமான ஒரு தலைவரை விளிம்புநிலை மக்களுக்கு ஈந்த அம்மா அவர்களுக்கு பல கோடி நன்றிகள் வணக்கங்கள்" என்று மகிழ்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.. ஒரே ஒரு அறிவுரையை தவிர என்றால், அது நிச்சயம் திருமணம்தான்.. இந்த ஒரு அறிவுரையே இவ்வுலகில் உள்ள தாய்மார்களின் உயிர் ஒலி.. உணர்வில் கலந்தது... இது ஒரு வரலாற்றுப்பிழை..ஒரு தாயின் வலி..! லட்சக்கணக்கான உணர்வுகளின் வலி..! இது தலைமுறைக்கும் ஆறாது..!" என்றும் கமெண்ட்கள் தெறித்து விழுகின்றன..