மேடைக்கு ஓடிய ஆதவ் அர்ஜுனா! "9 வயது குழந்தை! ப்ளீஸ் ப்ளீஸ்" பதறிய விஜய்! கடைசி நொடியில் நடந்தது என்ன
சென்னை: தவெக தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, மிக மோசமான ஒரு துயரம் நடந்தது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே இந்தத் துயரம் நடந்தபோது விஜய் பிரச்சாரத்தில் என்ன நடந்தது.. விஜய் கடைசிக் கட்டத்தில் என்ன செய்தார் என்பது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் 2026 சட்டசபைத் தேர்தல் காரணமாக மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் அவர் பல்வேறு ஊர்களுக்குப் போய் சென்று பேசி வருகிறார். விஜய்யை காணப் பலரும் வருவதால் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்து வருகிறார்கள்.

39 பேர் உயிரிழப்பு
இருப்பினும், அந்தக் கட்டுப்பாடுகளை விஜய் ரசிகர்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை என்ற புகார் இருந்து கொண்டே தான் உள்ளது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு துயரமான சம்பவம் நேற்று கரூரில் அரங்கேறியது. விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே விஜய் பிரச்சாரத்தில் என்ன நடந்தது. கடைசிக் கட்டத்தில் விஜய் என்ன செய்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதாவது கரூரில் விஜய் பேசும்போதே, இந்தக் கூட்ட நெரிசல் ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் விஜய் பேசிக் கொண்டு இருக்க.. இன்னொரு பக்கம் மக்கள் மயங்கி விழ ஆரம்பித்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டு இருந்தது. இருப்பினும், விஜய் இதைக் கவனிக்க வில்லை. அவர் தனது பிரச்சாரப் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
ஆதவ் அர்ஜுனா
அப்போது விஜய் பேசிக் கொண்டிருக்கும்போது சட்டென ஆதவ் அர்ஜுனா மேலே ஏறினார். அவர் விஜய் அருகே சென்று, "9 வயது பெண் அஷ்மிகா என்பவரைக் காணவில்லையாம். நீங்களே நமது தோழர்களிடம் சொல்லிக் கண்டுபிடித்துத் தரச் சொல்லுங்கள்" எனச் சொல்கிறார்.
இதையடுத்து விஜய்யும், "9 வயது பெண் அஷ்மிகாவை காணவில்லையாம். தம்பிகளே கொஞ்சம் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுங்கள்" என்கிறார். அதன் பிறகே நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்கிறார். கூட்டநெரிசல் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருப்பதை உணர்ந்து விஜய், தனது பேச்சை முடித்துக் கொள்ள முடிவு செய்கிறார்.
கடைசியில் செய்த காரியம்
பிறகு போலீசாரை பார்த்து, "போலீஸ் சார், ப்ளீஸ் ஹெல்ப் சார்.. ப்ளீஸ்!" என்று முடித்துக் கொள்கிறார். ஆனாலும், அதன் பிறகும் கூட மக்களைப் பார்த்து, "நம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லது நடக்கும். வெற்றி நிச்சயம்" என்று தனது மீண்டும் மக்களைப் பார்த்துக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அதன் பிறகே விஜய் பேச்சை முடித்துக் கொண்டு ஓடுகிறார்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த அசம்பாவிதச் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் கட்சி நிகழ்வில் நடந்த மிக மோசமான ஒரு சம்பவமாக இது கருதப்படுகிறது. சம்பவம் நடந்த உடனே உயர் அதிகாரிகள் கரூர் விரைந்தனர். காயமடைந்தோருக்குச் சிகிச்சை தர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினுமே இரவே கரூர் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications