திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... எல்லோரையும் பாராட்டு மழையில் நனைத்த ஸ்டாலின்
சென்னை: நெருக்கடியான காலகட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் வழக்கத்தை விட உற்சாகமாக பேசியுள்ளார் அவர். கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் தாம் கேட்டுக்கொண்டதற்காக களப்பணியாற்றியதால் மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலின் பாராட்டு மழையில் நனைத்துள்ளார்.

இது பலருக்கும் டானிக் போல் இருந்ததால் அவர்களும் ஸ்டாலினிடம் உற்சாகம் பொங்க தாங்கள் ஆற்றிய நிவாரணப் பணிகளை பட்டியலிட்டுள்ளனர். அதனை கவனமாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின், மக்கள் என்ன சொல்கிறார்கள், அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது எனவும் கேட்டிருக்கிறார். அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மூத்த மாவட்டச் செயலாளர்கள் சிலர் அடுக்கியுள்ளனர்.

மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவுவதை போல் கட்சிக்காரர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை கேட்டுச்செய்யுங்கள் என ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட வாரியாக, நகர வாரியாக என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன, யார் யாரெல்லாம் பயன் அடைந்துள்ளார்கள் என்ற விவரத்தை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் மனம் கோணாத வகையில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இதனிடையே களப்பணிகளை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம் என்றும், தொடர்ந்து தொய்வின்றி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், நம்மால் செய்ய முடியாத காரியங்களை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்து அந்த கோரிக்கை மனுக்கள் மீதான அவர்களின் நடவடிக்கையை (follow-up) பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
திமுக வரலாற்றில் முதல்முறையாகவும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முன் மாதிரியாகவும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications