கைமீறி போயிடுச்சே.. யாருங்க முதல்வர்? பாதியில் வெளியேறிய ரங்கசாமி.. புதுச்சேரியை "குலுக்கிய" பாஜக!
சென்னை: புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் முடிந்த நிலையில் ஆளும் கட்சி கூட்டணியில் கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த பூசல் வெளிப்படையாக தெரிந்ததாக கூறப்படுகிறது.
நாடு முழுக்க யூனியன் பிரதேசங்களில் மின் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தில் மத்திய பாஜக அரசு இறங்கி உள்ளது. புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க பாஜக முடிவு செய்துள்ள நிலையில் அங்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆளும் தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த முயற்சியை எதிர்த்து மின்துறை ஊழியர்களும் கடந்த நாராயணசாமி ஆட்சியிலேயே அங்கு அடையாள போராட்டம் செய்தனர். ஆனால் நாராயணசாமி மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்ததால் போராட்டம் பெரிதாக வெடிக்கவில்லை.
ஆனால் தற்போது அங்கு என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3 பேர் அவுட்.. 3 பேர் இன்.. இந்திய அணியை புரட்டி போடும்
பாஜக கூட்டணி
இதற்காக கடந்த பிப்ரவரியில் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு எடுக்கப்பட்டு, வரைவு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் பாஜக கூட்டணி அரசை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அப்போதே முதல்வர் ரங்கசாமி ஊழியர்களை அழைத்து பேசி போராட்டத்தை கைவிடும்படி செய்தார். பிப்ரவரியில் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் தற்போது அம்மாநில அரசு தனியார்மயமாக்கும் முயற்சிகளை செய்தது. இதையடுத்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டம்
இந்த போராட்டம் கடந்த 6 நாட்களாக நடந்து வந்தது. போராட்டம் உச்சம் அடைந்த நிலையில் பல இடங்களில் 12 மணி நேரம் கூட மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக புதுச்சேரியே இருளில் மூழ்கியது. மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில்தான் முதல்வர் ரங்கசாமி நேற்று அவசரமாக அமைச்சரவையை கூட்டினார். புதுச்சேரி மின்சாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காரசாரம்
இந்த போராட்டத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகள் காரணாமாக, ஆளும் கட்சி கூட்டணியில் கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த பூசல் வெளிப்படையாக தெரிந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சில என். ஆர் காங்கிரஸ் அமைச்சர்கள்.. தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும். என்ன வாக்குறுதி கொடுத்தாலும் போராட்டம் நிற்காது. அவர்களுக்கு உறுதியாக சொல்ல வேண்டும். அப்போது போராட்டத்தை கைவிடுவார்கள் என்று கூறி உள்ளனர். அதோடு போராட்டம் கையை மீறி சென்றுவிட்டது. தனியார் மயமாக்க மாட்டோம் என்று கண்டிப்பாக சொன்னால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவார்கள் என்று கூறியதாக தெரிகிறது.
பாஜக
ஆனால் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் உள்ளிட்டோர் அதற்கு வாய்ப்பே இல்லை . இந்தியா முழுக்க யூனியன் பிரதேசங்களில் இந்த முடிவை எடுத்துள்ளோம். அப்படி இருக்கும் போது புதுச்சேரிக்கு தனி ரூல்ஸ் கொண்டு வர முடியாது. மின்சார துறை ஊழியர்களிடம் விளக்கி அவர்களுக்கு இதை புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு வேலை உத்திரவாதத்தை கொடுக்க வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது. சரி இப்போது தற்காலிகமாக எப்படி போராட்டத்தை நிறுத்துவது என்று முதல்வர் ரங்கசாமி கேட்டதாக தெரிகிறது.
மத்திய அரசு
மத்திய அரசுடன் நேரடியாக புதுச்சேரி அரசு சார்பாக பேசுவதே சரியாக இருக்கும் என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு உடனே மின்துறை ஊழியர்களை ரங்கசாமி சந்தித்தார். டெல்லியில் பேசுகிறேன். நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். என்னை நம்புங்கள். கவலை வேண்டாம் என்று ரங்கசாமி வாக்குறுதி கொடுத்துள்ளார். இதை கேட்ட பின்பே மின்துறை ஊழியர்கள் தற்காலிமாக போராட்டத்தை வாபஸ் வாங்கினர்.
மீண்டும் மீட்டிங்
இதையடுத்து மீண்டும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்த ரங்கசாமி.. டெல்லியில் இதை பற்றி பேச வேண்டும், என்று கூறியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் ரங்கசாமி முதல்வர் போலவே செயல்படவில்லை என்று மின்துறை ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். முதல்வராக அவர் வலுவாக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் யூனியன் பிரதேசம் என்பதால்.. அவர்தான் முதல்வரா.. அவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு அவர் மென்மையாக செயல்பட்டு வருகிறார். முடிவுகளை எல்லாம் பாஜகதான் எடுக்கிறது என்று மின்துறை ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.