'2 கொலை கேஸ் இருக்கு.. கஞ்சா அடிப்பவன்.. நடந்தது ஆணவக் கொலை'.. பள்ளிக்கரணை பெண்ணின் தாய் பேட்டி
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் காதலித்து கல்யாணம் செய்த தங்கையின் கணவரை வெட்டி கொலை செய்த அண்ணன் - பெண்ணின் பெற்றோர்கள் நேற்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இறந்தவர் மேல் 2 கொலை கேஸ் இருக்கிறது.. நடந்தது ஆணவ கொலை இல்லை.. என்றார்கள்.
சென்னை பள்ளிக்கரணை டாஸ்மாக் பாருக்கு கடந்த வாரம் சனிக்கிழமை அன்று இரவில் மது குடிக்க வந்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரவீன் என்பவரை நான்கு இளைஞர்கள் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்நிலையில் காதலித்து கல்யாணம் செய்த தங்கையின் கணவரை வெட்டி கொலை செய்த புகாரில் அவரது அண்ணன் மற்றும் நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து பெண்ணின் தாய் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "எங்கள் பெண் வந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இரவு 9மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய பெண், இரவு 10 மணிக்கு மேலும் வராததால் நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். செவ்வாய் இரவு வீட்டை விட்டு வெளியேறிய பெண், வெள்ளிக்கிழமை இரவு தான் எங்களுக்கு கிடைத்தார்..
போலீஸ் ஸ்டேசனில் இருந்து போன் வந்தது. நாங்கள் ஸ்டேசனுக்கு போனோம்.. எங்கள் பெண்ணை கூப்பிட்டோம். எங்கள் பெண் எங்களுடன் வரமாட்டேன் என்று கூறிவிட்டார். அந்த ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் முதல் எஸ்ஐ வரை எங்களிடம் என்ன சொன்னார்கள் என்றால், அந்த பையன் மீது இரண்டு கொலை கேஸ் இருக்கிறது.. கஞ்சா கேஸ் இருக்கிறது.. உங்கள் மகளுக்கு வேறு பையனே கிடைக்கவில்லையா, எதற்கு உங்கள் மகள் அந்த பையனை தேர்ந்தெடுத்தார் என்று கேட்டார்கள்..
நான் அப்போது ஸ்டேசனில் என் பெண்ணின் காலில் விழுந்து அழுது கெஞ்சினேன்.. நல்லவன் என்றால் போ.. நான் வேண்டாம் என்று கூறவில்லை.. அவன் கொலைக்காரன், அவரை இரண்டு மாதத்தில் கொலை செய்ய ஆள் ரெடியாக இருப்பதாக சொல்கிறார்கள்.. உன் பெண் மூன்று மாதத்தில் தாலி அறுத்துவிட்டு வீட்டுக்கு வரும் என்று சொல்கிறார்கள் என்று கூறி, என் மகளின் காலில் விழுந்து அழுதேன். ஆனால் என் மகள் வரமாட்டேன்.. நான் அவனுடனே செல்வேன் என்று கூறியது..
நான் அப்போது இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன்.. யாராவது ஏதாவது பண்ணிவிட்டு என் பிள்ளைகளை இழுத்துவிடக்கூடாது என்று கூறினேன்.. இந்நிலையில் அண்மையில் இரவில் என் மகனை கைது செய்து சென்றார்கள். நாங்கள் மிகவும் நொந்து போய் உள்ளோம். இது ஜாதி எதிர்ப்பு கிடையாது.. இது ஆணவக்கொலை கிடையாது. அவன் கொலைக்காரன், கஞ்சா அடிப்பவன், அவன் மீது கேஸ்கள் இருக்கிறது. ஆனால் ஜாதி கொலையாக சித்தரிக்க பார்க்கிறார்கள்.. " என்றார்.












Click it and Unblock the Notifications