பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி.. ஆளுநர் மாளிகை முன் நடந்தது என்ன? .. வீடியோ உடன் டிஜிபி விளக்கம்
சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எப்படி என்றும் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டது எப்படி என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் சிசிடிவி காட்சிகளுடன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றும் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

கருக்கா வினோத் மீது ஏற்கனவே பலமுறை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மூலம் ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை சார்பில் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை அடுத்து, ஆளுநர் மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரவுடி கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளன.
தினசரியும் ஆளுநர் மாளிகையின் ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டு பதிவிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பாக நடந்தது என்ன என்று தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இன்று விளக்கம் அளித்தனர்.

மஞ்சள் சட்டை ஜீன்ஸ் பேண்ட் அணிந்த ரவுடி கருக்கா வினோத் தனது கையில் கேரி பேக் உடன் நடந்து வரும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டது. தேனாம்பேட்டையில் இருந்து கிண்டி ஆளுநர் மாளிகை வரைக்கும் ரவுடி கருக்கா வினோத் நடந்தே வந்திருக்கிறார். ஆளுநர் மாளிகை எதிரே நின்று பெட்ரோல் குண்டு வீசத் தொடங்கும் போது அங்கிருந்த காவலர்கள் விரட்டினர். முதல் பெட்ரோல் குண்டை வீசிய பின்னர் இரண்டாவது பெட்ரோல் குண்டை பற்ற வைக்கும் போது காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வருவதாக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றும் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை சென்ற போது அவர்மீது கட்டைகள், கற்கள் கொண்டு வீசப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறிய டிஜிபி சங்கர் ஜிவால் அது தொடர்பான வீடியோ காட்சியையும் காண்பித்து விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications