வீட்டு வேலைக்காக மலேசியா சென்ற பெண்.. 2 வருடம் கழித்து சென்னை திரும்பும் போது இப்படியா நடக்கணும்?
சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்து கொண்டிருந்த போது, அதில் பயணித்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் ராசாத்தி என்பவர் நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டடு உயிரிழந்தார். வீட்டு வேலைக்காக 2 வருடம் மலேசியா சென்றவர்,, திரும்பி வரும் போது நடந்த இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. மிகவும் பிஸியான விமான நிலையமான சென்னை விமான நிலையத்திற்கு மிக மிக அதிகமான விமானங்கள் வந்து செல்வது வழக்கம். தினமும் பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒரு பயணிகள் விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த 37 வயதாகும் ராசாத்தி என்பவர் பயணம் செய்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ராசாத்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கையிலேயே மயங்கினார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர். விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவக் குழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் விமானம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி பெண் பயணியை பரிசோதித்து பார்த்தாரக்ள். ஆனால் பயணி ராசாத்தி, திடீர் மாரடைப்பால் விமான இருக்கையில் அமர்ந்தவாறே உயிரிழந்து விட்டார். இந்த தகவலை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பயணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விமான நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ராசாத்தி வீட்டு வேலைக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூர் சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக ராசாத்திக்கு நுரையீரல் பாதிப்பு சம்பந்தமான நோய் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வேலை செய்ய முடியாத அவர், பணியை துறந்து விட்டு தனது சொந்த ஊர் திரும்புவதற்காக கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த போது தான் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications