சென்னையில் ஐடி ஊழியர் ஐஸ்வர்யா.. திருவொற்றியூர் தண்டவாளத்தில்.. கண் இமைக்கும் நேரத்தில் வந்த எமன்
சென்னை:சென்னையில் திருவொற்றியூர், தாம்பரம், அம்பத்தூர், வேளச்சேரி என எல்லா முக்கியமான வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் ஓடுகிறது. மின்சார ரயில்கள் ஓடும் பகுதி அருகே ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. அவர்கள் பெரும்பாலும் தண்டவாளத்தை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். அப்படி செல்லும் பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள். அப்படி ஒரு துயர நிகழ்வு திருவொற்றியூரில் நடந்துள்ளது.
சென்னையில் கடற்கரையை மையமாக வைத்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்திலும், வேளச்சேரி வழித்தடத்திலும், அரக்கோணம் வழித்தடத்திலும், கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும் மின்சார ரயில்கள் இயங்குகின்றன. இதேபோல் சென்ட்ரலில் இருந்தும் அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும் மின்சார ரயில்கள் இயங்குகின்றன.

இந்த மின்சார ரயில்கள் தான் சென்னையின் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதி மக்களுக்கு மின்சார ரயில்தான் ஜீவாதாரமாக இருக்கிறது. அவர்கள் வேலைக்கு செல்லவும், அத்தியாவசியமான பணிகளுக்கு செல்லவும் மின்சார ரயில்கள் பேருதவியாக இருக்கின்றன. அதேநேரம் மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் உள்ள வீடுகளில் வசிப்போர் தண்டவாளத்தை கடந்து செல்வதை தவிர்த்தால் பெரிய அளவில் விபத்துக்களை தடுக்க முடியும்.. தண்டவாளத்தை கடந்து செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அப்படித்தான் திருவொற்றியூரில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்த சாம்பாபு என்பவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 25). சாப்ட்வேர் என்ஜினியரான இவர், சென்னை தரமணியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர் 27ம் தேதி இரவு ஐஸ்வர்யா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்த போது மின்சார ரயில் மோதி ஐஸ்வர்யா தூக்கி வீசப்பட்டார்.
இதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா பலியானார். இதைப் பார்த்த ரயில்வே ஊழியர் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அண்ணாமலை நகர் கேட் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் இருபுறமும் கேட் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு நேரங்களில் மின் விளக்கு வசதிகள் இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நேற்று இரவு ஐஸ்வர்யா பயத்தில் வேகமாக நடந்து சென்றபோது தான் ரயில் மோதி இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்த விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications