சென்னையில் லட்சுமியின் நெஞ்சிலேயே ஏறி மிதித்த சுந்தரி, கோமதி.. கழிவறை முன்பு ஆடிப்போன செங்குன்றம்
சென்னை: சென்னை செங்குன்றத்தில் வாடகை வீட்டில் பொது கழிவறையில் தண்ணீர் ஊற்றுவதில் ஏற்பட்ட தகராறின்போது இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு செய்த செயல் அந்த ஏரியாவையே ஆடிப்போக வைத்துள்ளது. சுந்தரி என்ற பெண்ணும், கோமதி என்ற பெண்ணும் சேர்ந்து, லட்சுமி என்ற பெண்ணின் தலைமுடியை இழுத்து பிடித்து, மார்பில் எட்டி மிதித்தார்களாம்.. இப்படி தாக்கியதால் லட்சுமி அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பக்கத்து வீட்டில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக சண்டை, நாய் வளர்ப்பதால் ஏற்படும் சண்டை, தண்ணீரை கழுவி விடுவதால் ஏற்படும் சண்டை என பக்கத்து வீட்டில் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பிரச்சனைகள் வரும். அண்டை வீட்டாருடன் சிலர் சுமூகமாக விட்டுக்கொடுத்து செல்வார்கள்..

சிலர் வேண்டுமென்றே வம்பு வளர்க்கும் வகையிலும் செயல்படுவார்கள்.. சிலர் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் வம்பு வளர்ப்பார்கள்.. எதிர்த்து கேள்வி கேட்டால் சண்டைக்கு நிற்பார்கள்.. ஒரு சிலர் சாதி ரீதியாகவும் விமர்சனம் செய்வது உண்டு. தண்ணீர் பிரச்சனையை பொறுத்தவரை பெரும்பாலும் பெண்கள் தான் சிக்குவார்கள்.. சென்னை செங்குன்றத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடி பாதத்தை சேர்ந்த பிச்சாண்டி என்பவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி லட்சுமிக்கு 65 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டில் 50 வயதாகும் சுந்தரி , 30 வயதாகும் கோமதி ஆகியோர் வசிக்கிறார்கள். இவர்கள் 3 பேரும் ஒரே வளாகத்தில் உள்ள அடுத்தடுத்த வீடுகளில் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.
இந்த மூன்று வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பொது கழிவறை உள்ளது. அந்த கழிவறையை பயன்படுத்தி விட்டு சரியாக தண்ணீர் ஊற்றாமல் வந்ததாக இவர்கள் 3 பேருக்கும் இடையே நேற்று மாலை வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது வாக்குவாதம் முற்றி குடுமிபிடி தகராறில் ஈடுபட்டார்கள்.
அப்போது சுந்தரி, கோமதி இருவரும் சேர்ந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் மனைவியான மூதாட்டி லட்சுமியின் தலைமுடியை பிடித்து இழுத்தும், அவரது மார்பு பகுதியில் எட்டியும் உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்த லட்சுமி,மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், லட்சுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோழவரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுந்தரி, கோமதி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கழிவறையை பயன்படுத்தி விட்டு சரியாக தண்ணீர் ஊற்றாமல் வந்த தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications