பேய் மழையால் யூடர்ன்.. உறவினர்களுக்கு என்னாச்சு.. சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் பதற்றம்
சென்னை: சென்னையில் மிக்ஜாம் புயலால் அண்மையில் மின்சாரம் இன்றி, குடிநீர் இன்றி, செல்போன் சிக்னல் இன்றி மக்கள் தவித்தார்கள். அப்போது தென்மாவட்ட மக்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்று பதறினார்கள். இப்போது அப்படியே உல்டாவாக மாறி உள்ளது. சென்னை மக்கள், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் உறவினர்களுக்கு என்ன ஆனது என பதறி போய் இருக்கிறார்கள்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிக அளவு சென்னையில் வசிக்கிறார்கள். கல்வி மற்றும் வேலை மற்றும் தொழில் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நெல்லை சீமை மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அண்மையில் மிக்ஜம் புயல் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன..

பேருந்து, ரயில், மின்சாரம் இல்லை, செல்போன் இணைப்பு சேவை வேலை செய்யவில்லை. இணையதள சேவை முற்றிலும் முடங்கியது குடிநீர், பால் கூட கிடைக்காமல் மக்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டார்கள்.போன்ற இடர்பாடுகளும் ஏற்பட்டன. இதனிடையே சென்னை மழை வெள்ள காட்சிகளை டிவி மற்றும் நியூஸ்பேப்பர்களில் பார்த்து தென் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பதறிப்போனார்கள். சென்னையில் வசிக்கும் தங்கள் பிள்ளைகள், உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதை அறிந்துகொள்ள செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள். ஆனால் செல்போன் சேவை வேலை செய்யவில்லை. செல்போன் சிக்னலே 3 நாட்களுக்கு பிறகு தான் வந்தது. இணையதள சேவை சீரடைய ஒரு வாரம் ஆனது. சரியாக ஞாயிறு ஆரம்பித்து மறு ஞாயிறு வந்த போது தான் சென்னையில் இயல்புநிலை திரும்பியது.
இயல்பு நிலை திரும்பியவுடன் தங்கள், மகன், மகள் மற்றும் உறவினர்களிடம் செல்போனில் பேசிய பின்னரே தென் மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர். தற்போது இந்த சூழல் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. அதிகனமழையால் தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. சென்னையில் பெய்த மழையுடன் இந்த மழையை ஒப்பிட்டால் திருநெல்வேலி பகுதி மழை மிகமிக அதிகம் ஆகும். அம்பாசமுத்திரம் 41.6 செ.மீ, சேரன்மாதேவி 40.7 செமீ, மணிமுத்தாறு 31.7 செமீ, நாங்குநேரி 33.1 செமீ, பாளையங்கோட்டை 42 செமீ, காயல்பட்டினம் 92 செமீ, பாபநாசம் 35.2 செமீ, ராதாபுரம் 26.4 செமீ, திருநெல்வேலி 35.2 செமீ, சேர்வலார் அணை 26.9 செமீ, மழை பெய்தது.

இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் திரும்பிய திசையெல்லாம் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தாமிரபரிணி உள்ளிட்ட ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் பேரிடர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்கள் ஊரில் உள்ள பெற்றோர், உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதை அறிந்துகொள்ள செல்போனில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் வழக்கம் போல் பல இடங்களில் செல்போன் இணைப்பு சேவை கிடைக்கவில்லை.. உறவினர்கள் எப்படி இருப்பார்களோ? என்ற கவலையில் தென்மாவட்ட மக்கள் சென்னையில் தத்தளிக்கிறார்கள்..












Click it and Unblock the Notifications