‛‛என்னது வாய பொத்திட்டு இருக்கணுமா?’’ பிரஸ்மீட்டில் திடீரென டென்ஷனான சசிகலா.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: ‛‛என்னது வாயை பொத்திட்டு இருக்கணுமா'' என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்வியால் பிரஸ்மீட்டில் திடீரென்று சசிகலா டென்ஷன் ஆனார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அறியப்படும் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். இந்த சமயத்தில் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவில்லை.

தற்போது அதிமுக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.
இது எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக நிர்வாகிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது சசிகலா தமிழக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழக அரசை விமர்சனம் செய்யும்போது, ‛‛மக்கள் பிரச்சனைகளுக்கு இந்த அரசு சரிவர தீர்வு காணவில்லை. கொடநாடு வழக்கை வைத்து கொண்டு திமுக நாடகமாடி வருகிறது. திமுக அரசின் விசாரணை ஆமை வேகத்தில் செல்கிறது. அந்த வழக்கை இன்னும் திமுக முடிக்கவில்லை. அதன் பின்னணி பற்றி பத்திரிகையாளர்கள் தான் கேட்க வேண்டும். மேலும் தேர்தலுக்கு தேர்தல் கொடநாடு வழக்கு என்று வருகிறது. அதனை பொறுப்புள்ள முதலமைச்சர் தான் சொல்கிறார். இந்த வழக்கை அவர் விரைவாக நடத்த வேண்டும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு சசிகலா, ‛‛அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது'' என்றார். இதையடுத்து, ‛‛கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் அதிமுக பற்றி பேசக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே?'' என்று இன்னொரு பத்திரிகையாளர் கேட்டார்.
அதற்கு சசிகலா, ‛‛அவரு பேசினா நான் சும்மா வாயை பொத்திக்கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டுமோ?'' என பதில் கேள்வி எழுப்பினார். அதோடு இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் தான் அதிமுகவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், அதிமுக அழிந்துவிட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என்றும் சசிகலா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications