Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் அது என்ன வானவில் பேரணி? ரிப்பன் மாளிகையில் வண்ண விளக்குகள்.. LGBT ஆதரவு பெருகுகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானவில் பேரணி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? ரிப்பன் மாளிகையில் ஏன் வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன. இதனால் யாருக்கு நன்மை? இந்த மாதிரியான கேள்விகள் உங்கள் மனதில் எழுகின்றதா? அப்படி என்றால் கட்டாயம் இதைப் படியுங்கள்.

சமீப காலமாக சென்னையின் மற்றொரு அடையாளமாக மாறி 'வானவில் பேரணி'. இதில் கலந்து கொள்வதற்காகப் பல மாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல; பல மாநிலங்களிலிருந்தும் வருகை தருகின்றனர் தன்பால் ஈர்ப்பு மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள். அதாவது LGBTIQA+. அப்படி என்றால் என்ன என்பது இளம் தலைமுறைக்கு எளிதாகப் புரிந்துவிடும். கொஞ்சம் பழைய தலைமுறைக்குத்தான் இந்தச் சொல் அவ்வளவு எளிதாக விளக்குவதில்லை.

Chennai

அதாவது எல் என்றால் லெஸ்பியன். ஒரு பெண் மற்றொரு பெண் மீது மையல் கொள்வதற்கு இந்தப் பெயரை அறிவியல் உலகம் வைத்துள்ளது. அதேபோன்று ஜி என்றால் கே. ஆண் மீது ஆணுக்கு வரும் ஈர்ப்பு. பி என்றால் பைசெக்சுவல். இரண்டு பாலினத்தின் மீதும் இவர்கள் ஈர்ப்பு கொண்டவர்கள். டி என்றால் டான்ஸ்ஜெண்டர். அதாவது திருநங்கை. இதில் Qr என்பதும் Queer என்றும் A என்பது asexual என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

பல ஆண்டுகள் இந்தியாவில் உள்ள திருநங்கை மக்களுக்கு அடைக்கலம் தரும் நகரமாக மும்பை இருந்தது. பல மாநிலங்களிலிருந்து இந்தப் பிரிவினர் ஆதரவு தேடி மும்பையில் அடைக்கலமாகினர். அதற்கு இணையாகத் தமிழ்நாட்டில் கூவாகம் பகுதியில் நடைபெறும் திருவிழா இந்த மக்களின் வழிபாட்டு ஸ்தலமாக இருந்து வருகிறது. இங்கு நடைபெறும் திருநங்கைகள் அழகுப் போட்டி உலக அளவில் பிரபலமானது.

பல ஆண்டுகள் முன்பு திருநங்கை வகுப்பினர் தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படாத மக்களாக இருந்தனர். அவர்கள் மீது பல்வேறு விதமான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அவர்கள் கிண்டலான சில பெயரை வைத்து கேலி பேசுவது இயல்பான ஒரு செயலாகப் பார்க்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களில் கூட அவர் தரக்குறைவாகவே சித்தரிக்கப்பட்டன. பல படங்களில் அந்த மக்களுக்கு எதிரான காட்சிகள் வைக்கப்பட்டு வந்தன.

ஆனால், இன்று அப்படியான நிலை இல்லை. கேட்ட கேள்வி இல்லாமல் காவல்துறை அவர்கள் மீது கைவைக்க முடியாது. அதற்கான உரிமைகளை அந்த மக்கள் படிப்படியாகப் போராடிப் பெற்று வருகின்றன. ஒரு காலத்தில் திருநங்கை நூரி அம்மா என்பவர் ஊடகங்கள் வழியே பலவகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இவரைப் போலவே திருநங்கை ப்ரியா பாபு தனது எழுத்துகள் மூலம் சில சமூக மாற்றத்திற்கு அறைகூவல் விடுத்து வந்தார்.

Chennai

திருநங்கை சினேகா என்பவர் அரசு வாகன ஓட்டுநராக பணியில் அமர்த்தப்பட்டார். சப் இன்ஸ்பெக்டர் வேலையில் நஸ்ரியா என்ற திருநங்கைக்குப் பணி வழங்கப்பட்டது. இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று நடனக் கலைக்காக நர்த்தகி நட்ராஜ் எனும் திருநங்கை குடியரசுத் தலைவர் விருதையே பெற்றுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகள் முன்னதாக தமிழக வனத்துறையில் முதல் திருநங்கைக்கு இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டது. இதேபோன்று 5 ஆண்டுகள் முன்னதாக கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக நளினா பிரசிதா என்ற முதல் திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் சிந்து என்ற ஒரு திருநங்கை முதல் டிடிஇ வேலையில் அமர்த்தப்பட்டார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

ஒரு காலத்தில் பாலியல் தொழில் செய்வது, அல்லது கடை கடையாக யாசகம் கேட்பது என்று பரிதவித்து இந்த வகுப்பினர் இன்று அரசு அரவணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சம அந்தஸ்தைப் பெற்று வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சியில் திருநங்கைகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

சில ஆண்டுகள் முன்பாக முதல்வர் ஸ்டாலின் பால்புதுமையினர் அகராதியை அரசாணையாக வெளியிட்டுள்ளார். அவர்களை எப்படி என்ன பெயரிட்டு அழைப்பது என்பதற்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல துறைகளில் மாற்றுப் பாலினத்தவர் முன்னேற்றத்தை அரசு உறுதி செய்து வருகிறது. அதன் அடையாளமாகத்தான் நேற்று ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

வழக்கமாக ஜூன் மாதம் என்பது சர்வதேச ப்ரைட் மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகை வானவில் வண்ணங்களால் ஒளிரச் செய்துள்ளோம் என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது மாநகராட்சி. ஆனால், அந்தளவுக்கு விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டுவிட்டதா என்றால், இன்னும் முழுமையாக இல்லை. ஒரு சாரார் இந்த மக்களைப் புறக்கணிக்கவே செய்கின்றனர்.

பெரியாரிய, திராவிடக் கருத்துகளைக் கொண்ட முற்போக்காளர்கள் இவர்களை அரவணைத்து அன்பு காட்டி வரும் அதே வேளையில் வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் முற்றாக இம்மக்களை நிராகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. இளம் தலைமுறையினரிடம் பேசும் போது அவர்கள் யாரும் பால்புதுமையினரை வெறுத்து ஒதுக்குவதில்லை. அவர்களின் விருப்பம், அதில் நாம் தலையிட முடியாது என்ற ஜனநாயகக் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. ஆனால், மற்றொரு சாரார் இவர்களை விட்டால், சமுதாயமே சீரழிந்துவிடும் என்று கொந்தளிப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆனால், நாகரிகம் என்பது என்ன? அது காலங்காலமாக அப்படியே இருப்பதில்லை. ஒரு காலத்தில் எதை அநாகரிகம் என்று சொல்லப்பட்டதோ அவை இன்று நாகரிகமாக மாறிவிட்டன. சொல்லப் போனால், பேண்ட் சட்டையும் கிராப் தலையும் கூட ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகப் பலருக்கும் இருந்ததில்லை. இன்று பேண்ட் என்பது கிராப் என்பது சகஜமான ஒரு விசயம். அதைப்போலத்தான் பால்புதுமையினர்.

அன்று இருட்டில் பேசப்பட்ட விசயங்கள் இன்று வெளிச்சத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம் மனித உரிமை என்ற முழக்கம். உலகில் எந்த மனிதர் மீது யாரும் ஒடுக்குமுறையைச் செலுத்த முடியாது. அது சர்வதேச சட்டப்படி குற்றம். அதைக் கடைப்பிடிக்கவில்லை உலக நாடுகள் உங்களை பிறகு கேலி பேசும். நாகரிகமற்ற மனிதன் என ஒதுக்கி தள்ளும். அதன் ஒரு பகுதிதான் இந்த வானவில் பேரணி. அந்த மக்களில் குரல் வரலாற்றில் முதல் முறையாகக் கேட்கத் தொடங்கியுள்ளது.

Chennai

அவர்கள் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்த வானவில் பேரணி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போது அரசு தரப்பிலோ அல்லது வேறு அமைப்புகள் தரப்பிலோ பெரிய அளவில் ஆதரவு இல்லை. இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கிரேட்டர் சென்னை கட்டடம் வானவில் வெளிச்சத்தில் ஜொலிக்கிறது. இந்த மாற்றம் படிப்படியாக நடந்துள்ளது.

இது பற்றி சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா, "நாங்களும் இந்தியாவின் குடிமக்கள் தான். ஆகவே, எங்களை வெறுத்து ஒதுக்குவதோ அல்லது துன்புறுத்துவதோ கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லுவதற்காகத்தான் இந்தப் பேரணியை நடத்தி வருகிறோம். சென்னை வானவில் சுயமரியாதை பேரணி என்ற பெயரில் 2009இல் நாங்கள் இதை நடத்தினோம். அதன் பின்னால் பல மாவட்டங்களிலிருந்து இந்தப் பேரணிக்கு மாற்று பாலினத்தினர் வருகை தந்தனர்.

ஆகவே, இப்போது தமிழ்நாடு வானவில் சுயமரியாதை பேரணி என்று பெயரை மாற்றி இருக்கிறோம். பால்புதுமையினர் பற்றி சென்னை அரசு அதிகாரிகளுக்கு உள்ள விழிப்புணர்வு மற்ற மாவட்டங்களில் இல்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். மத்திய அரசு எங்கள் உரிமைகளை ஏற்றுச் சட்டத் திருத்தத்தைச் செய்ய முன்வர வேண்டும்" என்கிறார்.

இந்த வானவில் பேரணி ஏதோ சென்னையில் மட்டும் நடக்கவில்லை. உலக அளவில் இதே ஜூன் மாதத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் ஒரு சர்வதேச தொடர்பை இவர்கள் இந்த மக்கள் உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதன்மூலம் தங்களின் தங்களின் உரிமையை வலுவாக எடுத்துச் சொல்ல விரும்புகிறார்கள்.

அதேநேரம், ஓரினச் சேர்க்கையாளர்களால் பொது போக்குவரத்து, கழிவறை போன்ற பொது இடங்களை பயன்படுத்தும்போது சக பாலினத்தவருக்கு சீண்டல்கள் நேரக்கூடும் என்று, இதை எதிர்ப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் வாதிடுகிறார்கள். சக பாலினத்தையே காம கண்ணோட்டத்தில் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தை அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள். ஆனால் கட்டற்ற காமம் வேறு, இவர்களின் சுய விருப்ப காமம் என்பது வேறு என்பது எல்ஜிபிடி ஆதரவாளர்கள் பதில் வாதமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+