ராமதாஸ் - அன்புமணி பிரச்சனையில்.. குறுக்கே குருமூர்த்தி வந்தது எப்படி? ஓ இதுதான் அசைன்மெண்டா?
சென்னை: பாமகவில் நடக்கும் அப்பா-மகனுக்கிடையிலான பஞ்சாயத்து முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே போவதில் பாமகவினர் கவலை அடைந்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி அவர்களை திமுகவுக்கு இழுக்க அமைச்சர்களும், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக களமாடி வருகிறார்கள்.
இதில் பாமக எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் திமுகவின் வலையில் சிக்கியுள்ளனர். திமுகவுக்கு வாருங்கள், மீண்டும் அதே தொகுதி உங்களுக்கு கொடுக்கப்படும், மீண்டும் நீங்கள் எம்.எல்.ஏ ஆவதற்கு நாங்கள் கியாரண்டி என்று அவர்களிடம் உத்தரவாதம் தந்து கொண்டிருக்கின்றனர் திமுக அமைச்சர்கள். இதில் பாமக எம்.எல்.ஏ.க்கள் மதிமயங்கியுள்ளனர். பாமகவில் மோதல் முடிவுக்கு வராது போனால் அவர்கள் திமுகவுக்கு தாவுவது இயல்பாகவே நடக்கவிருக்கிறது.

திமுக பக்கம் இழுக்க திட்டம்
இந்த நிலையில், தந்தைக்கும் தனயனுக்கும் இடையே நடக்கும் மோதலை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகனிடம் பாமக நலன் விரும்பிகள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவரோ, இதில் தலையிட விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டாராம். அவர் ஒதுங்கிக் கொண்ட நிலையில்தான், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரிடம் பாமகவின் நலன் விரும்பிகள் பலரும் பேசியுள்ளனர். இதனையடுத்து, ராமதாசை தொடர்பு கொண்டு குருமூர்த்தியும் சைதை துரைசாமியும் தனித்தனியாக பேசியிருக்கிறார்கள். அவர்களை தோட்டத்துக்கு அழைத்துள்ளார் ராமதாஸ். இதனைத் தொடர்ந்து ராமதாசை சந்தித்து அவர்கள் விவாதித்துள்ளனர். அவர்களிடம் மனம் விட்டுப்பேசிய ராமதாஸ், அன்புமணியை பற்றி மேலும் பல விசயங்களைச் சொல்லி ஆதங்கப்பட்டார்.
அதனையெல்லாம் கேட்டுக்கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி, "இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் பாமகவில் இப்படி நடப்பது திராவிட கட்சிகளுக்குத்தான் லாபம். இந்த மோதலை கைத்தட்டி திமுக ரசிக்கிறது. உங்களை நம்பி ஒரு பெரும்பான்மை சமூகம் இருப்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இன்னைக்கு தமிழகத்தில் இருக்கும் சீனியர் லீடர் நீங்கள் தான். நீங்கள் உணர்ச்சிவயப்படலாமா? " என்றெல்லாம் பேசி ராமதாசை சமாதானப் படுத்தியிருக்கிறார்.
சைதை துரைசாமியும் இதே ரீதியில் பேசியுள்ளார். இதில் ஓரளவுக்கு ராமதாஸ் சமாதானமாகியிருக்கிறார். இவர்கள் இருவரும் வருவதால் அன்புமணியையும் தோட்டத்துக்கு வாருங்கள் என குருமூர்த்தி அழைக்க, அதனை தட்டமுடியாமல் தோட்டத்துக்கு வந்துள்ளார் அன்புமணி. சில ஒப்படைத்தலை அன்புமணி நிறைவேற்ற வேண்டும், செளமியாவை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது என சில கன்டிசன்களை ராமதாஸ் போட்டிருக்கிறார். இதனை அவர் நிறைவேற்றினால், விரைவில் இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி விழும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ராமதாசுக்கு நெருக்கமான மாநில நிர்வாகிகள்
நீக்க முடிவு
சமீபத்தில் கூட ராமதாஸ் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், அணித்தலைவர்கள் என கட்சியின் அனைத்துக் கட்டமைப்பிலும் உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தினார்.
ஆனால், இந்த கூட்டங்களில் 15 சதவீத ஆட்களே தோட்டத்திற்கு சென்றனர். மீதமுள்ள 85 சதவீத நிர்வாகிகள் அன்புமணியின் பின்னால் திரண்டனர். அவர் உருவாக்கிய சென்னை அலுவலகத்தில் திரண்டார்கள். தோட்டத்துக்குச் சென்ற 15 சதவீத ஆட்களிலும் 5 சதவீத ஆட்கள் அன்புமணியின் ஆட்கள் தான். தோட்டத்தில் என்ன நடக்கிறது ? ராமதாசின் திட்டம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே தனது ஆட்களை தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் அன்புமணி. இப்போது இவர்கள் இருவருமே நேரடியாக சந்தித்துவிட்டதால் விரைவில் பிரச்சனை முடியும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications