"170" முடிவாயிருச்சு.. ஒருபக்கம் நெருக்கும் பாஜக.. மறுபக்கம் குழப்பும் ஓபிஎஸ்.. அதிமுக கதி என்னாகுமோ
அதிமுக - பாஜக கூட்டணிக்குள் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது
சென்னை: தமிழக அரசியலை பாஜகதான் தீர்மானிக்கிறது.. இனியும் பாஜகதான் தீர்மானிக்கும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ள விவகாரம்தான் பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டு வருகிறது. இதனிடையே 170 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக தகவல்கள் கசிந்து வருவது மேலும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகின்றன.
3 மாதமாகவே தமிழக பாஜக ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்லி வருகிறது.. கூட்டணி உறுதி என்று அமித்ஷா சொல்லிவிட்டு சென்றும், கூட்டணி ஆட்சி கிடையாது என்று தமிழக முதல்வரும் உறுதியாக சொல்லிவிட்டார்.
அப்படி இருந்தும் கூட்டணி வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் என்று நேற்று குஷ்பு தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக தொடர்ந்து ஏன் இப்படி தெரிவித்து வருகிறது? எதற்காக பாஜக-அதிமுகவின் பூசல் குறையவே இல்லை? பாஜகவின் எதிர்பார்ப்புதான் என்ன? என்பது குறித்த பல சந்தேகங்களுக்கு இப்போது வரை விடையே கிடைக்கவில்லை
எல்.முருகன்
இதுகுறித்து சில அரசியல் நோக்கர்களை சந்தித்து பேசினோம். அவர்கள் சொன்ன கருத்து இதுதான்: "சமீப காலமாக அதாவது முருகன் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே ஒரு நெறியுடன் அக்கட்சி பயணிக்கவில்லை.. லேடியா மோடியா என்று கேட்டு திணறடித்த ஒரு கட்சியை இந்த அளவுக்கு பாஜக நடத்தக்கூடாது.. நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று இவர்கள் எதை வைத்து சொல்கிறார்கள்?
வேல் யாத்திரை
கருப்பர் கூட்டம் விவகாரமாகட்டும், வேல் யாத்திரை ஆகட்டும் இவைகளினால் பாஜக, தங்கள் இருப்பை காட்டி கொண்டது.. ஆனால், அது ஆரோக்கியமானதா? சர்ச்சைகளுக்கு நடுவில், கோர்ட் கண்டனத்துடன் யாத்திரை நடைபெற்றது எல்லாம் எப்படி வளச்சியில் சேக்க முடியும்? அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தமிழக தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசுவதாக அதிமுக அப்போது காரணம் சொன்னது.. ஆனால் சிடி ரவி பேசுவதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே?
அத்வானி
வாஜ்பாய், அத்வானி காலத்து பாஜக என்பது சித்தாந்த ரீதியில் இருந்தது.. ஆனால், இப்போதுள்ள பாஜக ஒருவித சாதுர்ய அரசியலில் நகர்ந்து வருகிறது... அதற்கேற்றபடி வளர்ச்சியும் பெற்று வருகிறது.. அதை மறுப்பதற்கில்லை, ஆனால், அதிமுகவை திணற வைக்கும் அளவுக்கு வளரவில்லை.. இதுவரை தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறதா? அந்த கட்சிக்கு எத்தனை எம்எல்ஏ, எம்பி.க்கள் இப்போது இருக்கிறார்கள்? வாக்கு சதவீதத்தை அதிமுகவை விட அதிகமாக வைத்திருக்கிறதா?
எடப்பாடியார்
இப்படி எந்த வகையிலும் இல்லாத ஒரு கட்சி எப்படி அதிமுகவை ஆட்டிவைக்க முடியும்.. அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்.. எடப்பாடியாரை 4 வருடமாக முதல்வராக மக்கள் அங்கீகரித்துள்ளார்கள்.. ஒரு கூட்டணில் உள்ள கட்சி என்றால், தொகுதிகளை அதிகமாக கேட்டு வாங்கி கொண்டு போகலாம்.. அப்படித்தான் இத்தனை காலம் நடந்துள்ளது.. அந்த வகையில் பாஜகவும் சீட் அதிகமாக கேட்க வேண்டியதுதானே? இப்போதைக்கு 170 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அதை பாஜக ஏற்குமா என தெரியாது.
எடப்பாடியார்
ஆனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியாரை ஏற்க தயங்குகிறது என்றால், பாஜகவில் யாராவது முதல்வர் வேட்பாளராக இருக்கிறார்களா? இருந்தால் இந்நேரம் சொல்லி இருக்க வேண்டியதுதானே.. அவங்களும் சொல்லாமல், இருக்கும் முதல்வர் வேட்பாளரையும் மட்டம் தட்டி பேசி கொண்டு, கூட்டணியில் சிக்கலையும் ஏற்படுத்தி கொண்டு இருப்பது எதற்காக?
திமுக
ஒருவித பயத்தை அதிமுகவுக்கு காட்டுகிறார்கள் என்று எடுத்து கொள்வதா? அல்லது குழப்பத்தை தருவதாக எடுத்து கொள்வதா? இதை ஏன் அதிமுக தலைமை பகிரங்கமாக கண்டிக்கவில்லை? எல்லாத்துக்கும் காரணம் ஓபிஎஸ்தான்.. அவரது மவுனம்தான்.. நேற்றுகூட அதிகமாக இருந்த நிதியமைச்சர் தான்தான் என்று, விளம்பரம் தருகிறார் என்றால், அவர் ஒரு வியூகத்தை கையில் எடுப்பதாக தெரிகிறது.. முதல்வருக்கு எதிரான வியூகமாக அது இருந்தால் நிச்சயம் அதிமுக ஆட்டம் கண்டுவிடும்.. திமுக தானாகவே மேலெழுந்துவிடும்' என்றனர்.