வாட்டி வதைக்கும் வெயில்.. குழந்தையை காருக்குள்ள விட்டுவிட்டு போகாதீங்க? Heat stroke எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் பொதுவாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் கோடை வெயில் அதிகம் சுட்டு எரிக்கும்.
ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்டிவதைக்கத் தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடைக் காலத்தில் வறட்சியே நிலவுகிறது.

பலரும் இளையராஜா பாடலில் வருவதைப் போல, 'ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா' என்று சோகப் பாட்டை ஹெட்போன் போட்டுக் கேட்டுக் கொண்டு திரிவதைப் பார்க்க முடிகிறது.
இந்தக் கொடுமைகளுக்கு இடையே தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது.
ஆகவே மக்கள் வெயில் தானே என்று அலட்சியம் காட்டக்கூட்டாது என்கிறார்கள் மருத்துவர்கள். இது வெயில் அல்ல. வெப்ப அலை. அந்த மாற்றம் பற்றிய பல தகவல்களைத் தருகிறார் டாக்டர் சபரி.
வெப்ப அலை பற்றி அவர், "நிஜமாகவே வெயில் அதிகமாகத்தான் இருக்கிறது. நாள் முழுவதும் வேலை பார்த்துவிட்டு படுக்கைக்குப் போனால் அடித்துப் போட்ட மாதிரி உள்ளது. உடல் முழுவதும் சோர்வாக உள்ளதை நன்றாகவே உணரமுடிகிறது.
இந்த வெயில் தாக்குதலால் உயிரிழப்பு வருவது ஏற்படுவது தீவிர நிலை. ஆனால், சாதாரண நிலையில் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இந்தச் சூட்டால் தசைகளில் பிடிப்பு ஏற்படும். உடல் முழுக்க சோர்வு இருக்கும்.

கோடைக்காலத்தில் அதிகப்படியாக வியர்வை வெளியேறுவதால், சோடியம் இழப்பு ஏற்படும். பொட்டாஷியம் அளவு குறையும். இதனால் வழக்கமான அளவைவிடக் கோபம் அதிகரிக்கும். ஒருவித எரிச்சல் ஏற்படும். தேவையே இல்லாமல் கத்துவார்கள். இதற்கு Heat exhaustion என்று பெயர்.
இதை மாதிரியே Heat syncope என்று ஒருநிலை உள்ளது. வெப்பம் அதிகம் தாக்குவதால், ரத்தக்குழாய்கள் எல்லாம் விரிவடையும். அப்படி உடல் முழுவதும் விரிவதால், மூளைக்குப் போகக் கூடிய ரத்தத்தின் அளவு குறையும்.
இந்தப் பாதிப்பால் மயக்கம் ஏற்படும். ஒரு 5 நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் இருந்துவிட்டு, மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புவார்கள். சூட்டினால் உடலில் வரக்கூடிய வெப்பத்தைத்தான் syncope என்கிறோம்.

இதற்கு அடுத்த நிலைதான் Heat stroke. இதைப் பலரும் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நமது மூளையில் ஒரு பகுதி உள்ளது. அது நமது உடலின் வெப்பநிலையை 32 டிகிரி தொடங்கி 37க்குளாக வைத்திருக்கும்.
நாம் அதிக நேரம் வெயிலில் நின்றுகொண்டுள்ள போது மண்டையில் அதிக வெப்பம் இறங்கும். அதனால் மூளையில் உள்ள பகுதி பாதிக்கும். வெயில் மண்டை மீது இறங்க இறங்க உடலில் வெப்பநிலை கூடிவிடும்.
இப்படி வெப்பம் அதிகரிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் மெல்லப் பாதிப்படையும். வெப்பநிலைக் கூடிக் கொண்டே போனால், முற்றாகச் சிறுநீரகம் செயலிழக்கும். முற்றிலும் மூளை செயலிழக்கலாம். அதன் மூலம் தான் உயிரிழப்பு ஏற்படலாம். ஹார்ட் அட்டாக் வரலாம். மொத்தத்தில் உயிரைப் பறிக்கும் பல மாற்றங்கள் உடலில் நிகழலாம்.
இதைத்தான் Heat stroke என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்" என்கிறார் இந்த டாக்டர்.
மேலும் இந்த வெப்ப அலை வீசி வரும் நேரத்தில் செய்யக் கூடாதவை பற்றி அவர் பட்டியல் போட்டு விளக்கி உள்ளார்.

செய்யக் கூடாதவை என்ன? செய்யக் கூடியவை என்ன?
#குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியில் போகவே கூடாது.
#வயதானவர்களைக் கட்டாயம் வேலைக்கு வைத்து வேலை வாங்கக் கூடாது
#கர்ப்பிணிப் பெண்கள் வெயிலில் பயணம் செய்வதைக் கட்டாயம் தவிக்கவும்
#வெயிலுக்காக காரின் உள்ளே ஆட்களை உட்காரவைத்து, கதவைப் பூட்டிவிட்டுச் செல்ல வேண்டாம். குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை உள்ளே உட்கார வைத்துப் பூட்டிவிட்டுச் செல்வதைத் தவிர்க்கவும்.
#அடர்த்தியான நிறங்கள் உள்ள உடைகளை அணிய வேண்டாம்
#வெள்ளை உடைகள் நல்லது
#ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தாகமே இல்லை என்றாலும் தண்ணீர் குடிக்க வேண்டும்












Click it and Unblock the Notifications