லோகேஷ் கனகராஜ் முதல் சிவகார்த்திகேயன் வரை! எல்லோர் கழுத்திலும் கருங்காலி மாலை! பாதாள முருகன் ரகசியம்
சென்னை: தமிழ்நாட்டில் இளைஞர்கள் இடையே தற்போது கருங்காலி மாலை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பிரபலங்கள் பலர் கருங்காலி மாலை அணிய தொடங்கி உள்ளனர்.
இணையத்தில் அவ்வப்போது சில பொருட்கள் டிரெண்டாவது வழக்கம். அப்படி தற்போது இளைஞர்கள் இடையே டிரெண்டிங்கில் இருக்கும் பொருள்தான் இந்த கருங்காலி மாலை. இதை வைத்து மாலை போட்டுக்கொள்வது, கையில் செயின் போல போட்டுக்கொள்வது, வீட்டில் கடவுளுக்கு மாலையாக போடுவது என்று பலரும் இதை பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், சூரி என்று பலர் இந்த கருங்காலி மாலையை அணிய தொடங்கி உள்ளனர். இந்த மாலையுடன் இவர்கள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாக தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இளைஞர்கள் இடையிலும் இந்த மாலைக்கு மவுசு கூடி உள்ளது.
கருங்காலி மரம்: இந்த கருங்காலி மாலை என்பது கருங்காலி மரத்தில் இருந்து செய்வது ஆகும். முழுக்க முழுக்க கருப்பாக இருக்கும் இந்த மாலை உட்புறமும் கருப்பாக இருக்கும். இந்த மாலையின் உட்புறமும் கருப்பாக இருக்கும் என்பதே இதன் சிறப்பு ஆகும்.
இதை மணி போல வெட்டி அதை மாலையாக கோர்த்து பயன்படுத்துவது இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.
பாசிட்டிவ் எனர்ஜி: இது அணிந்தால் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். நெகட்டிவ் எனர்ஜி கிடைக்காது. மனது நன்றாக இருக்கும். நல்ல முடிவுகளை எடுக்க முடியும். சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று பல்வேறு விஷயங்கள், காரணங்கள் இதை அணிவதற்கு சொல்லப்படுகிறது.
பொய்யாகவும் இருக்கிறது அதே சமயம் இந்த மாலையில் சில ஏமாற்று வேலைகளும் செய்யப்படுகின்றன. அதாவது பொய்யாகவும் சில மாலைகள் கருங்காலி மாலை என்று விற்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் கருங்காலி மாலை என்றால் அதன் மணிகளை வெட்டினால் அதன் உட்புறமும் கருப்பாக இருக்க வேண்டும். அதாவது உட்பகுதியும் கருப்பாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.. இதைத்தான் சரியாக பார்த்து வாங்க வேண்டும்.
ஆனால் இது தெரியாமல் கருப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட மாலைகள், கருப்பு பிளாஸ்டிக் மாலைகளை பலரும் அணிய தொடங்கி உள்ளனர். உண்மையான கருங்காலி மாலைகள் அதிக விலை கொண்டது. இது 8 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கூட விற்கும். பொய்யான மாலை 1000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது.
பெரும்பாலும் இந்த மாலைகள் எதுவும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுவது இல்லை. இவை ஜெய்பூரில் தயாரிக்கப்படுகிறது. ஜெய்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.
திண்டுக்கல் முருகன்: இந்த மாலையை அணிந்து பலரும் முருகன் கோவிலுக்கும் செல்வது வழக்கம் ஆகி உள்ளது. திண்டுக்கல் இராமலிங்க பட்டி கிராமத்தில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு செல்வது வழக்கம் ஆகி உள்ளது. அங்கே பலரும் இந்த மாலையோடு வழிபாடு நடத்துகிறார்கள்.
பலர் அந்த முருகனுக்கு இந்த மாலையை அணிவிக்கிறார்கள். இளைஞர்கள் இடையே டிரெண்டாகி இருக்கும் இந்த கருங்காலி மாலையின் விற்பனையும் இணையத்தில் அதிகம் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு ஆபரண கடைகளிலும் இதன் விற்பனை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications