தீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை
சென்னை: எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறுவதன் மூலம் தீவிரவாதி என்றாலே அவர்கள் மற்ற மதத்தினர்தான் என்று அவர் கூற வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இறுதிக் கட்ட வாக்குப் பதிவு 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். மோடி முதல் கமல்ஹாசன் வரை அத்தனை பேருமே சர்ச்சையாக பேசி வருகிறார்கள். கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரை ஆதரித்து பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துவிட்டதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கமல் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்றார். இதில் இவர் கூறிய முதல் கருத்து மட்டும் விவாதத்திற்குள்ளாகிவிட்டது.

ராஜேந்திர பாலாஜி
இவரது கருத்து வடஇந்தியா முதல் தென்னிந்தியா வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்று, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார்.

ஆங்கில ஊடகம்
கமல்ஹாசன் கருத்துக்கு இந்து மகாசபை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில ஊடகத்தில் ஒரு பதிலை அளித்துள்ளார்.

கேள்வி
அதில் அவர் கூறுகையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மற்ற மதத்தினர் மட்டுமே தீவிரவாதியாக இருப்பார்கள் என சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாதி இல்லை
தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என கூறலாம். ஆனால் இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என கூறுவது மற்ற மதத்தினரை புண்படுத்தும்படியாக உள்ளது. தனக்கு எந்த சாதியும் இல்லை என்று கூறிய பிரதமரே இந்து மதத்துக்கு ஆதரவாகவும் மற்ற மதத்திற்கு மறைமுகமாக எதிராகவும் ஒரு கருத்தை கூறியிருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆக, கமல் ஒரு பேச்சு பேசப் போய், அதற்கு கொடுக்கப்பட்டு வரும் பதில்களைப் பார்த்தால் அவையும் சர்ச்சையாகவே வருவது அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications