வந்துவிட்டது 5ஜி.. உங்க சிம் கார்டை அப்டேட் பண்ணுங்க! பரவும் புதுவித மோசடி.. கவனமா இருங்க மக்களே
சென்னை: நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாகப் புதுவித மோசடி அரங்கேறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நவீன உலகில் இப்போது அனைத்துமே டிஜிட்டல் மாயமாகிவிட்டது. ஷாப்பிங், டிக்கெட் முன்பதிவு, பில் செலுத்துவது என அனைத்துமே இப்போது டிஜிட்டல் முறையிலேயே நடந்து வருகிறது.
கொரோனா கலத்திற்குப் பின்னர், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பல மடங்கு வேகமடைந்தது. கிராமப்புறங்களிலும் இணையச் சேவை வேகமாகவே இருந்தது.

டெலிகாம் சேவை
இதனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது. இணையச் சேவை என்பது மக்களுக்கு தங்கள் வாழ்க்கையை எளிதாக்க உதவுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது 4ஜிதான். அன்லிமிடட் 4ஜி சேவை பல துறைகள் வளர காரணமாக அமைந்தது. குறைந்த நிலையில், அதிவேக இணையம் கிடைத்தால் பலரும் பயனடைந்தனர். இப்போது டெலிகாம் துறையில் இந்தியா அடுத்த அத்தியாயத்தை எழுதத் தொடங்கி உள்ளது.

5ஜி சேவை
4ஜி வெற்றிகரமாக அமைந்த நிலையில், அடுத்தாக 5ஜி சேவை தொடங்கி உள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையைக் கடந்த அக். 1ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகில் மிகப் பெரிய மொபைல் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் 5ஜி சேவை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 5ஜி மூலம் பல சந்தைகள் அடுத்த லெவலுக்கு செல்ல உள்ளது.

மோசடி
5ஜி சேவையில் ஒரு நொடிக்கு 10 ஜிபி வரை இணையச் சேவை அதிவேகமாக இருக்கும். இந்தியாவில் படிப்படியாகவே 5ஜி சேவை வர உள்ளது. டெல்லி, மும்பை, உள்ளிட்ட எட்டு நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதேபோல ஜியோ நிறுவனத்திலும் முதலில் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை வர உள்ளது. இதற்கிடையே 5ஜி சிம் அப்டேட் என்ற பெயரில் புதுவித மோசடியும் அரங்கேறத் தொடங்கி உள்ளது.

எச்சரிக்கை
4ஜி-இல் இருக்கும் நெட்வோர்க் சேவையை 5ஜிக்கு மாற்றித் தருவதாகக் கூறி பொதுமக்களை மர்ம நபர்கள் தொடர்பு கொள்கிறார்கள். அதற்காக ஓடிபி வேண்டும் எனக் கூறி அதை பெற்று மோசடி செய்கிறார்கள். சமீப நாட்களில் இதுபோன்ற மோசடிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் சிம் கார்டை 4ஜி-இல் இருந்து 5ஜிக்கு அப்டேட் செய்வதாகக் கூறி, யாராவது ஓ.டி.பி எண்ணைக் கேட்டால் தரவேண்டாம் எனப் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளார்கள்.

புதுச்சேரி போலீசார்
இது தொடர்பாகப் புதுச்சேரி போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தற்போது 4ஜி செல்போன் சேவையை 5ஜி சேவைக்கு மாற்றித் தருகிறோம் என்று கூறி ஒ.டி.பி பாஸ்வோடு எண்ணைக் கொடுங்கள் என மர்மநபர்கள் மூலம் அழைப்புகள் வர தொடங்கியுள்ளது. அப்படி யாராவது ஓ.டி.பி எண்ணைக் கேட்டால் தரவேண்டாம்.. அப்படிக் கொடுத்தால் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைப் பறிபோகும் அபாயம் உள்ளது" என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

தேவையில்லை
5ஜி சேவைக்கு எனத் தனியாக சிம் வாங்கத் தேவையில்லை என்று டெலிகாம் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. ஏற்கனவே இருக்கும் சிம் கார்டுகளிலேயே 5ஜி சேவையைப் பெறலாம். மொபைல் மட்டும் 5ஜி வசதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நீங்கள் இருக்கும் ஏரியாவில் 5ஜி வசதி உள்ளதா என்பதை அந்தந்த செயலிகள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications