NOTA என்றால் என்ன? அதிக வாக்குகள் வந்தால் தேர்தல் ரத்தாகுமா? நோட்டா வாக்கு குறித்த சுவாரஸ்ய விதிகள்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் தயாராகி வருகிறது. அதே நேரத்தில் சில சமூக வலைதள பதிவுகளில் நோட்டாவுக்கு வாக்களிக்க போகிறோம் என்ற பதிவுகளை பார்க்க முடிகிறது. நோட்டா என்றால் என்ன? அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தால் அந்த தேர்தல் ரத்து ஆகுமா? என பல சந்தேகங்கள் வாக்காளர்களுக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில், இந்திய தேர்தல் முறையில் வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய உரிமையாக பார்க்கப்படும் NOTA பற்றி வாக்காளர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்களை எளிமையாகப் பார்ப்போம்..
தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடியில் EVM இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் ஒரு விருப்பம் தான் NOTA. NOTA (None Of The Above) என்பது "மேலே உள்ள எந்த வேட்பாளரையும் நான் தேர்வு செய்ய விரும்பவில்லை" என்பதைக் குறிக்கும் ஒரு வாக்கு விருப்பமாகும்.
அதாவது, ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரையும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், NOTA-வை தேர்வு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம். இந்த NOTA வசதி, இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் மூலம் 2013ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோட்டா வாக்குகள்
அதன் பிறகு நாடாளுமன்றம், சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் NOTA விருப்பம் இடம்பெற்று வருகிறது. NOTA-க்கு அதிக வாக்குகள் வந்தால் என்ன ஆகும்? என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. உண்மையில்,
பலர் நினைப்பது போல NOTA-க்கு அதிக வாக்குகள் வந்தால் தேர்தல் ரத்து செய்யப்படாது. ஒரு தொகுதியில் NOTA அதிக வாக்குகள் பெற்றாலும், வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவரே அந்த தொகுதியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அதாவது, NOTA ஒரு எதிர்ப்பு வாக்கு என்றாலும், அது தேர்தல் முடிவை மாற்றும் அதிகாரம் உடையதல்ல என்பது தன் உண்மை.
NOTA விதிகள்
1. NOTA வாக்குகள்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்போது, NOTA-க்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது என்பதும் தனியாக வெளியிடப்படும். இதன் மூலம் அந்த தொகுதியில் மக்கள் எவ்வளவு அதிருப்தியில் உள்ளனர் என்பதைக் கணிக்க முடியும்.
2. வாக்காளரின் ரகசியம்
முன்னர் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றால் தனியாக பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது EVM இயந்திரத்தில் NOTA பட்டன் இருப்பதால், வாக்காளரின் தேர்வு முழுமையாக ரகசியமாக இருக்கும்.
3. மறுதேர்தல் இல்லை
ஒரு தொகுதியில் NOTA அதிக வாக்குகள் பெற்றாலும், அந்த தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுவே பலருக்கு ஆச்சரியமாக இருக்கும் முக்கிய விதியாகும்.
4. கட்சிகளுக்கு எச்சரிக்கை
ஒரு தொகுதியில் NOTA வாக்குகள் அதிகமாக இருப்பது, அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது என்பதை காட்டும். இதனால் அடுத்த தேர்தலில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஏன் NOTA முக்கியம்?
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்குப் பதிலாக, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு ஜனநாயக வழியாக NOTA பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாக பதிவு செய்ய முடிகிறது. மேலும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகளுக்கு மறைமுக அழுத்தமாகவும் NOTA செயல்படுகிறது.
அதிக முக்கியத்துவம்
NOTA என்பது வெறும் ஒரு பட்டன் மட்டுமல்ல. அது வாக்காளர்களின் கருத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய ஜனநாயக கருவியாகும். யாரையும் தேர்வு செய்ய விருப்பமில்லை என்றாலும், வாக்குரிமையை பயன்படுத்தி எதிர்ப்பை பதிவு செய்ய உதவும் வழியாக NOTA பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் NOTA-க்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு முறையிலும் மாற்றம் வரலாம் என்பதற்காக இது இன்னமும் நடைமுறையில் உள்ளது.












Click it and Unblock the Notifications