இதான் "ரிஸ்க்".. கொஞ்ச நேரத்தில் வேலையை காட்ட போகும் "வானிலை".. தமிழ்நாட்டிற்கு வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் இந்த வார இறுதி மற்றும் அடுத்த வாரம் மழை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சம் தொட்டு உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.
இன்று அல்லது நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு அடுத்த வாரம் மீண்டும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வானிலை
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ் அமைப்பு (www.chennairains.com) கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், சென்னையில் அண்ணாநகரில் திங்கள் கிழமை மட்டும் 7 செமீ மழை வரை பெய்து உள்ளது. இரண்டு முறை மழை பெய்ததால் இவ்வளவு மழை பதிவாகி உள்ளது. முதல் மழை 30 மிமீ அளவிற்கு பதிவானது. சென்னையில் இந்த புதிய பேட்டர்ன் தொடங்கி உள்ளது.

சென்னை ரெயின்ஸ்
அதாவது அதிக ஆற்றல் கொண்ட மழை சிறிய அளவில் பெய்கிறது. அதாவது குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்து நிற்கிறது. இது சென்னைக்கு புதிய சவாலை கொடுத்து உள்ளது. இந்த வடகிழக்கு பருவ மழை என்பது குறைந்த நேரத்தில் அதிக மழையை பொழிய கூடிய ரிஸ்க் கொண்டது. அந்த ரிஸ்க், சீர்காழியில் வெறும் 6 மணி நேரத்தில் 40 செமீ மழை பெய்த போதே உறுதியானது.

வங்கக்கடல்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியில் மெதுவாக ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த திடீர் பெருமழைகள் ஏற்படுகின்றன. அக்டோபர் 22ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையில் இருந்தே நமக்கு இரண்டு விதமான மழை எபிசோடுகள் ஏற்பட்டு உள்ளன. முதல் ஒன்று இலங்கை அருகே ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான மழை. இரண்டாவது ஒன்று ஒரு வாரம் கழித்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகஏற்பட்டது .

மூன்றாவது மழை
இப்போது மூன்றாவது மழை எபிசோடை எதிர்ப்பார்க்க வேண்டும். இந்திய ரயில்வே சார்பாக வாரம் வாரம் விடப்படும் வீக் வார ரயில் போல இந்த எபிசோடு வருகிறது. தெற்கு சீன கடல் பகுதியில் இருந்து வரும் பல்ஸ்கள்தான் இதற்கு காரணம். நேற்று இந்திய வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்டில் புதிதாக உருவாகும் தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகி அதன்பின் மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கூறியுள்ளனர்.

ரிஸ்க்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெரும்பாலும் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டை நெருங்க நெருங்க இது வலிமை அடையலாம். வட கடலோர மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு சிக்கல் அளிக்க கூடிய ஒன்றாக இந்த மழை எபிசோட் இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நெல்லூர், ஆந்திர பகுதிகளில் அதிக மழை சில மணி நேரங்களில் வார இறுதியில் பெய்யலாம்.

எபிசோட்
இதற்கு காரணம் வறண்ட நிலக்காற்று. இந்த வறண்ட நிலக்காற்று காரணமாக பெய்யும் மழை என்பது சில மணி நேரங்களில் அதிக மழையை கொடுக்கும். ஆனால் இது பெய்ய போகும் இடங்களை உறுதியாக கணிக்க முடியாது. அது நேரத்தை பொறுத்து மாறும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மரக்காணம் வரை இந்த மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. காற்றழுத்த தாழ்வு பகுதி மாறும் திசையை பொறுத்தே இந்த இடம் உறுதியாகும்.

டெல்டா மழை
தமிழ்நாட்டில் டெல்டா தொடங்கி சென்னை வரை பல்வேறு கடலோர மாவட்டங்கள் இந்த வார இறுதியில் நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. இங்கு 20 செமீ மழை வரை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வாரம் சில இடங்களில் 35-40 செமீ மழை கூட சில இடங்களில் பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வறண்ட காற்று காரணமாக தமிழ்நாட்டில் கடந்த முறையை போல அதிக மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் கடலோர மாவட்டங்களில் கடந்த முறையை போல நல்ல கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications