‛2 மேட்டர்’.. திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஸ்டாலின் கூறியது என்ன? கேஎன் நேருவால் உடைந்த ரகசியம்
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 2 மேஜர் மேட்டர் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கி உள்ளது குறித்த முக்கிய தகவலை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை தி நகர் ஓட்டல் அக்கார்ட்டில் தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் டிசம்பர் 17 ல் சேலத்தில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர் பணி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் இந்த கூட்டத்தில் ‛‛நாம் கைக்காட்டும் நபர் பிரதமராக வேண்டும் என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். யார் வெற்றி பெறுவாரோ அவரே வேட்பாளராக இருப்பார். இவர் தான் இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதுவும் இல்லை. கூட்டணி குறித்து உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். அதனை கட்சி தலைமை பார்த்து கொள்ளும். உற்சாகமாக தேர்தல் பணியை செய்யுங்கள்’’ என முதல்வர் ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் வெளியாகின உள்ளன.
இந்நிலையில் தான் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் கேஎன் நேரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அவர் விளக்கமாக கூறினார். இதுபற்றி கேஎன் நேரு கூறியதாவது: முக்கியமான முன்னெடுப்புக்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பணிகளை 6 மாதங்களுக்கு முன்பே திமுக சார்பில் தொடங்கி விட்டோம்.
70 ஆயிரத்துக்கும் மேலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டது. 5 மண்டலங்களிலும் மிகப்பெரிய கூட்டங்கள் போல் பயிற்சியை நடத்தி முடித்து இருக்கிறோம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் அடுத்தக்கட்ட பணி குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கூறப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் கூட சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என ஸ்டாலின் கட்டளையிட்டு உள்ளார். எங்களின் அடுத்த முக்கியமான பணி என்பது சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்போடும், எழுச்சியோடும் நடத்தி காட்ட வேண்டும் என்பது தான். திமுக மாநாடு நடக்கிறது என்றால் அதன் எழுச்சி நீண்டகாலம் இருக்கும். தற்போது நடப்பது இளைஞரணி மாநில மாநாடு.
சகோதரரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு ஏராளமான இளைஞர்கள் கழகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். செல்லும் ஊர்களில் எல்லாம் புதிய புதிய இளைஞர்கள் கட்சிக்கு வருகிறார். கட்சியும் இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை செய்து வருகிறது. இளைய பட்டாளத்தை கட்டுக்கோப்பாகவும், திராவிட கொள்கையை நிலைநிறுத்துவதற்காகவும் தான் இந்த இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டார்’’ என்றார்.












Click it and Unblock the Notifications