லாஸ்ட் டைம் மாதிரி நடக்க கூடாது! மோடியின் சென்னை விசிட்.. பறந்து வந்த உத்தரவு.. பாஜக போடும் பிளான்!
சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில் பாஜக சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி கடந்த முறை சென்னை வந்த போது நடந்தது போன்ற சம்பவங்கள் நடந்து விட கூடாது என்று அந்த கட்சி பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Recommended Video
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது. இதற்காக சென்னை முழுக்க மாஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் மட்டுமின்றி சென்னை முழுக்க இதற்காக அலங்காரம் செய்யப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த தொடர் தொடங்க உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.

ஸ்கோர்
கடந்த முறை பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்த போது அதில் ஸ்கோர் செய்தது என்னவோ முதல்வர் ஸ்டாலின்தான். பிரதமர் மோடி இருந்த மேடையிலேயே வைத்து ஒன்றியம் ஒன்றியம் என்று பல முறை பேசினார். அதேபோல் திராவிடம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பல முறை பேசினார். முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசியதை பார்த்ததும் பாஜக தலைவர் அண்ணாமலையும் கொதித்து போய் கடுமையான விமர்சனங்களை மறுநாள் வைத்து இருந்தார். முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் தவறு என்று அண்ணாமலை விமர்சனம் செய்து இருந்தார்.

ஏற்பாடுகள்
இந்த பயணத்தில் பாஜக சரியாக ஏற்பாடுகளை செய்யவில்லை என்று டெல்லி புள்ளிகள் சிலர் கடிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த முறையும் சென்னை பயணத்தில் ஸ்கோர் செய்ய போவது யார் என்ற போட்டி எழுந்துள்ளது. இன்றும் நாளையும் பிரதமர் மோடி சென்னையில்தான் இருப்பார். இன்று மாலை நடக்க உள்ள செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதில் அதிகம் கவனம் பெற போவது யார் என்ற போட்டி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே போஸ்டர்களில் மோடி படம் இல்லை என்று பாஜகவினர் புகார் வைத்து வருகிறார்கள்.

பாஜக புகார்
இதற்காக பாஜக நிர்வாகிகள் சிலர் தமிழ்நாடு அரசின் போஸ்டர்களில் மோடி படத்தை ஒட்டிய சம்பவங்களும் கூட நடைபெற்றன. அதை திமுக ஐடி விங்கும் கூட நீக்கியது. இன்னொரு பக்கம் சர்வதேச வீரர்கள் பலரும் தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகளை பாராட்டி உள்ளனர். ஸ்டாலின் படங்கள் பல இடங்களில் இடம்பெற்றுள்ள நிலையில்.. அவர்தான் தற்போது வரை இந்த தொடரில் சென்டர் ஆப் அட்ராக்சனாக இருக்கிறார். இந்த தொடர் மூலம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஸ்கோர் செய்ய போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இன்று மாலை பிரதமர் மோடி செஸ் துவக்க விழாவில் என்ன பேசுவார்.. மேடையில் என்ன சொல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோடி பேச்சு
கடந்த முறை நடந்தது போல இந்த முறை நடக்காமல் இருக்கும் வகையில் பிரதமர் மோடியின் பேச்சு இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக பிரதமர் மோடி மேடையில் பேச போகும் சில விஷயங்கள் கடந்த முறை நடந்த சம்பவங்களுக்கு பதிலடியாக இருக்கும்.. அதற்கு ஏற்றபடி உரை தயார் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் பிரதமர் மோடி கவனம் பெறும் வகையில் பாஜக சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பார்த்து பார்த்து ஏற்பாடு
இன்று மாலை மாலை 6 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் சில நிமிடங்கள் மோடி பேசுவார். அப்போது மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோடி கடந்த முறை சென்னை வந்த போது நடந்தது போன்ற சம்பவங்கள் நடந்து விட கூடாது என்று அந்த கட்சி பார்த்து பார்த்து ஏற்பாடுகளை செய்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications