முறியடிக்கணும்.. வீடு வீடாக போங்க.. விடாதீங்க! சின்னம் மாறும் மதிமுக, விசிக.. திமுக மாஸ்டர்பிளான்
சென்னை: மதிமுக கேட்ட பம்பரம் சின்னத்தையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்ட பானை சின்னத்தையும் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. கூட்டணி தலைமையான திமுகவை இந்த முடிவு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
முன்னதாக எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும் மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பம்பரம் சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலும் இல்லை என தெரிவித்தார். எனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையர் தான் முடிவெடுப்பார் எனவும் கூறினார்.
தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி மதிமுக மனு அளித்துள்ளதாகவும் அந்த மனு மீது நாளை காலை ஒன்பது மணிக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் மதிமுக கட்சி 1 எம்பி தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது , அதனால் அந்த கட்சிக்கு பம்பரம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளது.
விசிக கட்சிக்கு இரண்டு எம்பி இருந்தும் கூட .. இப்போது 2 இடங்களில் போட்டியிட்டு கூட, 1% வாக்கு இல்லை என்பதை காரணம் காட்டி பானை சின்னத்தையும் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பாஜகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்களின் பிரபல சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு சின்னங்களை வழங்க மறுத்துள்ளது.
திமுகவினர் முடிவு: இது தொடர்பாக திமுகவினரும் பேசுகையில்.. இது திமுக கூட்டணிக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஏற்கனவே பம்பரம் சின்னத்தையும் , பானை சின்னத்தையும் வைத்து பிரச்சாரம் செய்துவிட்டனர். பல இடங்களில் சின்னங்களை படங்களாக வரைந்துவிட்டனர்.
இன்னும் 20 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளது. அப்படி இருக்க இப்போது சின்னத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்த சின்னத்தை பிரபலப்படுத்த நாங்கள் வீடு வீடாக செல்வோம். இந்த மோசமான அரசியலை முறியடிக்க என்று திமுக தலைமை சார்பாக கட்சி கூட்டணி நிர்வாகிகளுக்கு தகவல் சென்றுள்ளதாம்.












Click it and Unblock the Notifications