அசத்தும் தமிழ்நாடு அரசு.. மொத்தம் ரூ.28 கோடியா? ஒப்பந்தம் போட்டு கலக்கிய ஐஓசி.. இனிமேல் நிம்மதி
சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் சமூகமேம்பாடு மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.28 கோடி மதிப்பிலான காசநோய் கண்டறியும் கருவிகளை வழங்குவதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.
"2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு நவீனங்களையும், முன்னெடுப்புகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

நிறுவனங்கள்: இந்தியன் ஆயில் நிறுவனமும் சமூக மேம்பாடு மேலாண்மை திட்டத்தின் மூலம், பிரதமரின் முயற்சியால் உருவான டிபி முக்த் பாரத் அபியான் திட்டத்தை ஆதரிக்கும் வகையில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் காசநோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்குவதன் மூலம், காசநோய்க்கு எதிரான போரை முன்னெடுத்து வருகிறது.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆரம்பச்சுகாதார நிலையங்களின் பயன்பாட்டுக்காக ரூ.28 கோடி செலவில் 192 காசநோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன் செய்துள்ளது.
ஒப்பந்தம்: இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி.சி.அசோகன், தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மாநில மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் கூடுதல் இயக்குநர் ஆஷா ஃபிரெட்ரிக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
முன்னதாக, இந்த நிகழ்வின்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, "இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பல்வேறு சமூகமேம்பாடு மேலாண்மை திட்டத்தின் முயற்சிகள் மூலம், தமிழகத்தில் சிறந்த சுகாதார வசதிகளை வழங்க உதவி வருகிறது.. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளின் ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளை ஐஓசி தடையின்றி விநியோகம் செய்தது ஒரு முக்கியமான உயிர் காக்கும் செயலாகும்'' என்று பாராட்டு தெரிவித்தார்.
நம்பிக்கை: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், "கடந்த ஓராண்டு முழுவதும் 20 லட்சம் சளி பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை தமிழ்நாட்டில் 97 ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் ஊட்டச்சத்து மருந்துகள் தரப்படுகிறது.
இப்போது ஐஓசிஎல் நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, காசநோய் மூலக்கூறு கண்டறியும் கருவிகளை வாங்கும்போது 272 அரசு ஆரம்ப சுகாதார நிலைநிலையங்களில் காசநோய் கண்டறியும் செயல்பாடுகள் அதிகரிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications