இதுதான் "சென்னை!" ஒரே இடம்.. அன்று ஓடியது டிராம் ரயில்.. இன்று பறக்க போகுது மெட்ரோ.. செம கனெக்ஷன்
சென்னை: தலைநகர் சென்னையில் இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டிராம் ரயிலுக்கும் நவீன மெட்ரோவுக்கும் இடையே இருக்கும் சுவாரசிய தொடர்பு குறித்துப் பார்க்கலாம்.
சென்னையில் இப்போது போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி நகரின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மெட்ரோ கட்டுமானம் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த மெட்ரோ தொடர்பாக ஒரு சுவாரசிய தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
டிராம் ரயில்கள்: 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சுற்றி வந்த டிராம் ரயில்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மதராசபட்டினம் திரைப்படத்திலும் இதை அழகாகக் காட்டியிருப்பார்கள். ஆனால் கார், பைக் போன்ற வாகனங்களின் வருகையால் டிராம் மெல்ல வழக்கொழிந்து போனது. ஆனாலும், இன்னுமே நகரில் டிராமின் எச்சங்கள் இருக்கவே செய்கிறது. அப்படி 100 வருடத்திற்கு முன்பு, சென்னையில் பரபர டிராம் நிலையங்களில் ஒன்றாக இருந்த இடம் இப்போது மெட்ரோ நிலையமாக மாறுகிறது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அந்த இடம் இடையில் சில காலம் துணை மின் நிலையமாக இருந்த நிலையில், இப்போது அது மீண்டும் சென்னை மெட்ரோவின் ஒரு பகுதியாக மாற இருக்கிறது. ஒரு காலத்தில் எங்கிருந்து டிராம்கள் சென்றதோ.. இப்போது அதே இடத்தில் இருந்து மெட்ரோ ரயில்கள் செல்லவுள்ளது. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்த துணை மின்நிலையம் இன்னும் கூட டிராம் ஷெட்டின் எச்சங்களைக் கொண்டுள்ளது, இதுதான் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில் மெட்ரோ நிலையமாக மாற உள்ளது.
துணை மின் நிலையம்: வரும் டிசம்பர் மாதம் இந்த துணை மின் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்படும். அதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ நிலையமும் சுரங்கப்பாதைகளும் அமைக்கப்படும். இதற்கான கட்டுமான பணிகள் நவம்பர் 2027க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ 2025 முதல் படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கே இருக்கும் இந்த துணை மின்நிலையம் தான் முன்பு டிராம் ஸ்டேஷனாக இருந்தது. டிராம்களை நிறுத்த பயன்படுத்தப்பட்ட பழைய பாதைகள் இன்னுமே கூட பிரதான கட்டிடத்தில் இருக்கிறது. இதனால் மெட்ரோ விரிவாக்கத்தின் போதும் இந்தக் கட்டிடம் அகற்றப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் மெட்ரோ நிலையத்திற்கு எந்தளவுக்கு இடம் தேவை என்பது குறித்தும் சென்னை மெட்ரோ இன்னும் தெளிவாகக் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.
என்ன பிளான்: இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ தரப்பில் அதிகாரிகள் கூறுகையில், "ராதாகிருஷ்ணன் சாலை- ராயப்பேட்டை ஹைரோடு சந்திப்பின் கீழே ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ ஸ்டேஷன் கட்ட திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மண் பரிசோதனை இப்போது நடந்து வருகிறது.. இங்கே இருக்கும் மேம்பாலத்தின் 7 தூண்கள் இடிக்கப்படும்.. அப்போது தான் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள முடியும். மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் முடிந்த உடன் மீண்டும் மேம்பாலம் கட்டப்படும்.
ஆர்.கே.சாலை என்பது விஐபிகள் அதிகம் செல்லும் ரூட்டாக இருக்கிறது. இதனால் மேம்பாலத்தை இடிப்பதும், சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்வது சிக்கனலான ஒன்றாக இருக்கிறது. எனவே, அதையும் கருத்தில் கொண்டு கட்டுமான பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

அன்றும் இன்றும்: சென்னையைப் பொறுத்தவரை டிராம் சேவை என்பது கடந்த 1895 முதல் 1950 வரை இருந்து. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே, 24 கிமீ தூரத்திற்கு விரிவான டிராம் சேவையைக் கொண்ட நகராகச் சென்னை இருந்தது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது நவீன கட்டமைப்பிற்கு ஏற்ப மெட்ரோவை கொண்ட நகரமாகச் சென்னை மாறுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்தால், சுமார் 150 கிமீ நீளத்திற்கு விரிவான மெட்ரோ கனெக்ஷனை கொண்ட நகரமாகச் சென்னை மெட்ரோ மாறும்.












Click it and Unblock the Notifications