தேர்தல் ரிசல்ட் அதிமுகவுக்கு உணர்த்தும் பாடம் என்ன..? ஏன் எடுபடவில்லை இ.பி.எஸ்.ஸின் பிரச்சாரம்..?
சென்னை: இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என அனைத்து பதவிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் இருக்கும் நிலையில், அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுக சீனியர் நிர்வாகிகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிராமப்புற தேர்தல்
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் திமுக அமோக வெற்றியை நோக்கி அனைத்து மாவட்டங்களிலும் முன்னேறி வரும் சூழலில், அதிமுகவால் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியவில்லை. இத்தனைக்கும் கிராமப்புறங்களில் தான் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு வங்கி அதிகம் இருக்கும். அப்படிப்பட்ட கிராமப்புறங்களில் நடந்த தேர்தலிலேயே அதிமுகவால் இப்போது சோபிக்கமுடியவில்லை என்றால் நிச்சயம் கட்சி செயல்பாடுகள் குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

பிரச்சாரம்
தமிழக வரலாற்றில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சி என்ற வரலாற்றை பெற்றுள்ள அதிமுகவுக்கு எப்போதுமே கிராமப்புற மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கும். அந்த செல்வாக்கு இந்த தேர்தலில் எங்கே போனது என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வி. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் சரி, இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சரி எடப்பாடி பழனிசாமி மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக பிரச்சாரம் செய்து வந்தார். இதனிடையே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ஓ.பி.எஸ். பிரச்சாரத்தில் அவ்வளவு வேகம் காட்டவில்லை.

மாஜிக்கள்
இவர்கள் இப்படி என்றால், அதிமுக ஆட்சியில் வளம் கொழித்த இலாக்களை கைகளில் வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த தேர்தலில் சைலண்ட் மோடுக்கு ஏன் சென்றார்கள் என்பது இப்போது வரை புரியவில்லை. மொத்தத்தில் கிராமப்புற மக்கள் மனதில் இருந்து இரட்டை இலை சின்னம் மெல்ல ஒதுங்கத் தொடங்கியிருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. கிராமப்புற தேர்தலிலேயே எடப்பாடி பழனிசாமி செய்த பிரச்சாரம் எடுபடவில்லை என்கிற போது, அடுத்து வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எடுபடுமா என்றால் அது கேள்விக்குறிதான்.

உட்கட்சி மோதல்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லோரும் நாட்டாமை, சசிகலாவுடன் மோதல், இரட்டை தலைமைக்கிடையே காணப்படும் அதிகார பனிப்போர், என அதிமுகவை சுற்றி அக்கட்சியின் உட்கட்சி பிரச்சனைகள் பல உள்ளன. அது அந்தக் கட்சியின் உட்கட்சி விவகாரம் என்பதால் நாம் அதைப்பற்றி பெரிதாக விவாதிக்க தேவையில்லை. இருப்பினும், உட்கட்சி பிணக்கு தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சியை தோற்கடித்திருக்கிறது என்பதை அதிமுக நிர்வாகிகளால் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications