ஆளுநர் வழக்கு.. ஜனாதிபதி மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு.. தமிழ்நாட்டின் அடுத்த திட்டம் என்ன?
சென்னை: ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விளக்கம் கோரியுள்ளார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, 3 கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அதில், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை எதிர்ப்பது ஏன்?
மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் முடக்குவதை சட்டப்பூர்வமாக்க பாஜக முயற்சிக்கிறதா? பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு முடக்க பார்க்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் விவாதமாகி இருக்கும் நிலையில், தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக திமுக எம்பி வில்சன் பேசியுள்ளார்.

அதில் திமுக எம்பி வில்சன் பேசுகையில், இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக அரசமைப்பு சட்டத்தில் இருந்த பிரச்சனைகளை எடுத்து கூறியதால், உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த வழக்கின் உத்தரவு மற்ற மாநிலங்கள் தாக்கல் செய்த வழக்குகளிலும் பொருந்தும். இதனை மத்திய அரசு தடுக்க நினைக்கிறது.
அதேபோல் தமிழக அரசு வழக்கில் போட்ட உத்தரவுகளை, வருங்காலத்தில் எப்படி செயல்படுத்தாமல் இருப்பது என்று எண்ணுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதனால் ஜனாதிபதி குறிப்பு என்ற போர்வையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இந்த வழக்கில் 3 ஆண்டுகளாக மசோதாக்கள் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்ததோடு, வருங்காலத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. 415 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் ஆளுநர்கள் சொல்வதை போல் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.
இந்த வழக்கின் மூலம் அவர்களின் நோக்கம் முறியடிக்கப்பட்டதால், சீராய்வு மனுவோ அல்லது மறுசீராய்வு மனுவையோ தாக்கல் செய்யாமல், குடியரசுத் தலைவர் மூலமாக விளக்கம் கேட்டுள்ளனர். இதனை பின் வழியாக வருவதாகவே கருதுகிறோம். இதனை தமிழக அரசு சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும். இந்த விவகாரத்தில், தீர்ப்பு நிலுவையில் மட்டுமே உள்ளது.
அரசமைப்பு சட்டத்தை பொறுத்தவரை மசோதாக்களின் மீது உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்றே சொல்லி இருக்கிறது. ஆனால் ஆளுநர்களுக்கு 5 ஆண்டு பதவிக்காலம் இருக்கிறது, 5 ஆண்டுகள் வரை எதுவும் செய்ய மாட்டோம் என்று சொல்வது ஏற்க முடியாத விஷயம். எந்த மனு கொடுத்தாலும் ஒரு காலக்கெடு உள்ளது. அதுவொரு தவறான புரிதல் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications