Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி மூலப்பத்திரம் இல்லாதவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியுமா? தமிழக அரசு வைத்துள்ள ஒரே வழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்துள்ளார். இந்த சட்ட மசோதா காரணமாக, இனி மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யவே முடியாது.. அசல் ஆவணம் இல்லாமல், நகலை வைத்து பத்திரப்பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை முறியடிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படுகிறது. எனவே இனி மூலப்பத்திரம் இல்லாதவர்கள் பத்திரப்பதிவு செய்ய மாற்று வழிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பாப்பு என்பவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சார் பதிவாளருக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு என்ன தீர்ப்பளித்தது. அதன்பிறகு மூலப்பத்திரம் குறித்து விவாதங்கள் அதிகமானது.மூலப்பத்திரம் இல்லாமல் நகலை வைத்து பத்திரப்பதிவு செய்தே ஆக வேண்டும் என்று நிலை ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு காரணமாக வழக்கின் விவரங்களை பார்ப்போம். அதன்பிறகு அரசு எடுத்த பதில் நடவடிக்கை பற்றியும் பார்ப்போம்.

What is the only way the TN government has for people without original deeds to register deeds

நாமக்கல்லைச் சேர்ந்த பாப்பு என்பவர் தனது மூதாதையர் சொத்தை தன் பெயரில் இருந்து தனது சகோதரர் பெயருக்கு மாற்றுவதற்கு மூலப்பத்திரம் இல்லை என ராசிபுரம் சார்பதிவாளரை கடந்த சில ஆண்டுக்கு முன்பு அணுகியுள்ளார். ஆனால் ராசிபுரம் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். அதே நேரம் ஏற்கனவே அதே சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட மூலப் பத்திரத்தின் நகலையும் ஏற்க ராசிபுரம் சார்பதிவாளர் மறுத்துவிட்டார். இதையடுத்த மூலப் பத்திரத்தின் நகலை ஏற்க உத்தரவிட வேண்டும் என்று பாப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியம், சக்திவேல் அமர்வு விசாரித்து கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பு விவரம் தான் இன்று பெரிய அளவில் பத்திரப்பதிவில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

மூலப்பத்திரம்

வழக்கமாக ஒரு பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவு சட்டப்படி மூலப்பத்திரம் அதாவது அசல் ஆவணம் வேண்டும். மூலப்பத்திரம் இல்லாவிட்டால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெற்ற ஜெராக்ஸ் நகல் இருக்க வேண்டும்.. அதுவும் இல்லாவிட்டால் போலீசில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து, அதற்கு போலீசார் அளித்த சான்று இருக்க வேண்டும் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. மூலப்பத்திரம், அல்லது மூலப்பத்திரம் கிடைக்கவில்லை என்ற போலீஸ் சான்று ஆகிய இரண்டும் இல்லாவிட்டாலும், பத்திரத்தின் நகலை அலுவலக ஆவணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து பதிவு செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்கனவே இருக்கும் என்பதால், அதனை ஒப்பிட்டுப் பார்த்து மனுதாரரின் சொத்து மாற்ற பத்திரத்தை ராசிபுரம் சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறோம்" என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

பத்திரப்பதிவு

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் வழக்கிலும் மதுரை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. திருநெல்வேலி மாவட்டம் விகேபுரத்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் என்பருக்கு சொந்தமாக அம்பை தாலுகா சிவஞானபுரம் வடக்குத் தெருவில் இரு சர்வே எண்களில் இரு நத்தம் நிலங்கள் இருந்தது. இந்த சொத்துக்கள் அவரது தந்தை கடந்த 29.6.1998ல் தானமாக கொடுத்தவை ஆகும். இந்த சொத்தை அவரது மனைவி பெயருக்கு மாற்றம் செய்வதற்கு வி.கே.புரம் சார்பதிவாளரை அணுகியிருக்கிறார். அப்போது மூலபத்திரம் அசல் தாக்கல் செய்யவில்லை என்பதால் பத்திரபதிவிற்கு மறுத்ததுடன் காவல்துறையில் மூலபத்திரம் தொலைந்ததற்கான சான்று வாங்கி வந்தால் தான் பத்திர பதிவு செய்ய முடியும் என்று சார்பதிவாளர் திருப்பி அனுப்பினார்.

சார் பதிவாளர்

இதனால் மூலபத்திரத்தின் நகலை வைத்து சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்திட உரிய உத்தரவிட வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் அலெக்ஸாண்டர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், ஒருவர் பத்திரபதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவு சட்டப்படி மூலபத்திரம் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை மூலபத்திரம் இல்லாவிட்டால் சார் பதிவாளர் போலீசில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து அதற்கு போலீசார் சான்று அளிக்க வேண்டும் .


போலீஸ் சான்று

ஆனால் போலீஸ் சான்று அளித்தால் தான் பத்திரபதிவு செய்ய முடியும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. எல்லா நேரங்களிலும் போலீஸ் சான்று தேவை என கூறுவது முறைகேடான வழியில் சான்று பெறுவதை ஊக்குவிக்கும். போலீஸ் சான்று பெறுவதில் ஏற்படும் செலவு மற்றும் சிக்கல்களால், வெளிமாநிலங்களில் இருந்து சான்றுகள் வருவது அதிகரித்துள்ளதாக ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே அசல் மூல ஆவணம் மற்றும் போலீஸ் சான்று இல்லாவிட்டாலும் நகலை ஒப்பிட்டு பார்த்து பத்திர பதிவு செய்யவேண்டும்.

பதிவு அலுவலக ஆவணம்

அனைத்து ஆவணங்களும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருக்கும் என்பதால் அதனை மட்டுமே ஒப்பிட்டு பத்திர பதிவு செய்ய வேண்டும். அசல் மூல ஆவணம் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் மனுதாரரின் பத்திரத்தினை பதிவு செய்ய மறுத்தது தவறானது. ஆகவே மனுதாரரின் பத்திரத்தினை ஒருவார காலத்திற்குள் பதிவு செய்யவேண்டும். அதற்கு மூலப்பத்திரத்தை கேட்காமல் பதிவாளர் பதிவு செய்து கொடுக்க வேண்டும் " இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார். உயர்நீதிமன்றத்தின் அடுத்தடுத்த தீர்ப்புகள் காரணமாக மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்கிற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு.. தமிழக அரசு மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் மேஜர் உத்தரவு

புதிய சட்டம்

தமிழக சட்டசபையில் நேற்று மத்திய பதிவுச் சட்டம்-1908-ன் சில பிரிவுகளை தமிழகத்திற்கு ஏற்றபடி திருத்துவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி நேற்று அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அசையாச் சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களைப் பதிவு செய்வதில் மோசடி, பொய்யாவணம் புனைதல் மற்றும் ஆள்மாறாட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய பதிவுச் சட்டத்தின் 69-ம் பிரிவை பயன்படுத்தி தமிழ்நாடு பதிவு விதிகளில் 55-ஏ என்ற விதி 1949-ம் ஆண்டு புகுத்தப்பட்டது. அந்த விதி, அசல் உரிமை மூல ஆவணம் அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற பதிவேடுகளை, அசையாச் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்யும் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.


உச்ச நீதிமன்ற உத்தரவு

ஆவணத்தை பதிவு செய்பவர், தொடர்புடைய அசையா சொத்தின் மீது ஒரு உரிமை மூலத்தைக் கொண்டுள்ளாரா? என்பதை உறுதிப்படுத்துவதே அந்த விதியின் நோக்கமாகும். இது மோசடியான பரிவர்த்தனைகளை தவிர்ப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடாகும். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 7-ந் தேதி பிறப்பித்த தீர்ப்பில், 69-ம் பிரிவின் கீழ் விதியைச் செய்யும் அதிகாரத்தை பயன்படுத்தி 1908-ம் ஆண்டுச் சட்டத்தின் ஷரத்துகளுக்கு முரணாக உள்ள ஒரு விதியை உருவாக்க முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளது.

ஆவணங்களைப் பதிவு செய்வதில் மோசடி

இந்த சூழ்நிலைகளில், 55-ஏ என்ற விதியின் நோக்கத்தை செயல்படுத்தவும், ஆவணங்களைப் பதிவு செய்வதில் மோசடி, பொய்யாவணம் தயாரித்தல் மற்றும் ஆன்மாறாட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, மத்திய சட்டத்தில் மாநில சட்டத் திருத்தத்தின் மூலம் சில தேவையான பிரிவை உட்புகுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.

வில்லங்க சான்றிதழ்

அசையாச் சொத்து தொடர்பான ஒரு ஆவணம் எந்த பதிவு அலுவலரிடம் பதிவிற்காக சமர்ப்பிக்கப்படுகிறதோ, அது சமர்ப்பிக்கப்படும் தேதிக்கு முன்பு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட சொத்தின் வில்லங்க சான்றிதழுடன் இணைத்து, சொத்தின் முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்கா விட்டால் அதை பதிவு அலுவலர் பதிவு செய்யக்கூடாது. சொத்தின் மீது அடமானம் தொடர்பான வில்லங்கம் இருக்கும் போது, அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாவிட்டால், அந்த ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது.


பட்டா வேண்டும்

சொத்தின் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்படவில்லை என்றால், அந்த ஒப்பந்தத்தின் நிவாரணத்திற்கான உரிமை வழக்கை தாக்கல் செய்வதற்கான கால வரையறை முடியாத சூழ்நிலையில் அந்த ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது. மூதாதையர் சொத்தாக இருந்து, முந்தைய அசல் ஆவணம் இல்லாத நேர்வில், அந்தச் சொத்து தொடர்பாக வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட பட்டா சமர்ப்பிக்கப்படாவிட்டால், அதை பதிவு செய்யக்கூடாது.

நாளிதழில் விளம்பரம்

முந்தைய அசல் ஆவணம் தொலைந்து போய்விட்டால் அதற்கான அறிவிப்பை உள்ளூர் நாளிதழில் வெளியிட்டு, அந்த விளம்பரத்துடன் சேர்த்து காவல் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டாலும் அதை பதிவு செய்யக்கூடாது" இவ்வாறு தமிழக அரசின் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய ஒரே வழி

தமிழக அரசின் புதிய சட்டம் காரணமாக மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய ஒரே வழி தான் இருக்கிறது. என்ன தான் உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தாலும், மூலப்பத்திரம் இல்லாமல் தற்போதைய நிலையே பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலையே தொடர்கிறது. மூலப்பத்திரம் தொலைந்து போனால், அவர்கள், மூலப்பத்திரம் தொலைந்து போய்விட்டதாக தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றிலாவது விளம்பரம் வெளியிட வேண்டும். அந்த விளம்பரம் வெளியான கணிசமான நாட்களுக்கு பிறகு காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.

காவல்துறை விசாரணை

காவல் துறையில் ஆவணம் தொலைந்து விட்டது. கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளதை கூறி ஒரு சான்றிதழ் வழங்குவார்கள். அந்த சான்றிதழ் வழங்கும் முன்பு போலீசார், உண்மையில் தொலைந்து போனதா என்பதை விசாரிப்பார்கள். ஆம் உண்மையில் தொலைந்து தான் போனது, வேறு எதுவும் சிக்கல் இல்லை என்பதை அறிந்த பின்னரே சான்றிதழ் வழங்குவார்கள். அந்த சான்றிதழையும், அசல் ஆவணம் தொலைந்தது தொடர்பாக உள்ளூர் நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஆகியவற்றுடன் சென்றால் மட்டுமே இனி பத்திரப்பதிவு செய்வார்கள்.

நகலை ஏற்க மாட்டார்கள்

அதேபோல் ஏற்கனவே பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள ஆவணத்தின் நகலை கொண்டு வந்து கொடுத்து பத்திரப்பதிவு செய்ய சொன்னால் பதிவாளர்கள் யாரும் ஏற்கவே மாட்டார்கள். எனவே போலீஸ் சான்றிதழ், விளம்பரம் ஆகியவற்றுடன் சென்றால் தான் மூலப்பத்திரம் இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு செய்ய முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+