"புதிய உச்சம்.." எகிறி அடிக்கும் தங்கம் விலை.. குறைய வாய்ப்பு இருக்கா? ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே வேகமாக அதிகரிக்கும் நிலையில், தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது.. வரும் நாட்களில் அதன் விலை குறையுமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை நேற்றைய தினம் முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தைக் கடந்தது.. அதேபோல ஒரு சவரனுக்கு ரூ.48,000 கடந்தது.

இதற்கிடையே தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது. இது வரும் காலத்தில் அதிகரிக்குமா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது குறித்து அவர், "தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி, செய்கூலி எல்லாம் சேர்த்தால் இப்போதே ஒரு கிராம் தங்கம் அசால்டாக 6500 ரூபாயைத் தாண்டிவிடும். விரைவில் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
ஆனால், என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டார்கள். எனவே, வரும் காலத்தில் தங்கம் விலை சற்று குறைந்தால் உடனே வாங்கிக்கொள்ளுங்கள். நான் ரூ.5800இல் இருக்கும் போதே சொன்னேன். அதைப் பலரும் கேட்கவில்லை. இப்போது அதைத் தாண்டிவிட்டது. எனவே, குறையும் போது வாங்குங்கள்" என்று கூறியிருந்தார்.
எவ்வளவு தேவை: அதேபோல மற்றொரு வீடியோவில், "அனைத்து மிடில் கிளாஸ் மக்களிடமும் குறைந்தது 200 கிராம் தங்கம் தேவை. நான் முன்பு 400 கிராம் தங்கம் என்றேன். ஆனால், இப்போது விலை ஏறிவிட்டதால் 200 கிராம் என்கிறேன். 200 கிராம் என்றால் மொத்தம் 12 லட்சம். நான் முன்பு கூறி போதே தங்கம் 3000- 3500இல் வாங்கி இருந்தீர்கள் என்றால் அது இப்போது 24 லட்சமாக இருந்து இருக்கும். இதுதான் உங்கள் எமர்ஜென்சி பணமாக இருக்க வேண்டும்.
அடுத்த 18 முதல் 24 மாதங்களில் தங்கம் விலை நிச்சயம் ஒரு கிராம் 7000 ரூபாயைத் தாண்டும். இப்போதைக்கு உங்களிடம் 400 கிராம் தங்கம் இல்லை என்றால் வாங்குங்கள். இல்லையென்றால் சற்று காத்திருக்கலாம் என்பது எனது கருத்து" என்று கூறியிருந்தார்.
என்ன காரணம்: பொதுவாகத் தங்கம் விலை அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. உதாரணமாகப் பொருளாதாரம் நன்றாக இருந்தால் தங்கம் விலை பெரிதாக உயராது. அதேநேரம் பொருளாதாரத்தில் எதாவது பிரச்சினை வந்தால் உடனே தங்கம் விலை அதிகரிக்கும். அதேபோல உலகில் எதாவது போர் உள்ளிட்ட பொருளாதாரத்தைப் பாதிக்கும் விஷயம் நடந்தாலும் தங்கம் விலை அதிகரிக்கும்.
அதாவது பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைக் கருதுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். கொரோனா காலத்தில் தங்கம் விலை திடீரென எந்தளவுக்கு அதிகரித்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் ஹமாஸ் போர் ஆரம்பித்த போதும் தங்கம் விலை அதிகரித்தது. இது தவிரத் தங்கம் விலை அதிகரிக்க அமெரிக்க மத்திய வங்கியும் ஒரு முக்கிய காரணம்.
அமெரிக்க மத்திய வங்கி இத்தனை காலம் வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், தங்கம் விலை சுற்று குறைந்தது. ஆனால், இப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அமெரிக்க மத்திய வங்கி தனது ஜூலை மாதம் கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என மார்கெட் நம்புகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை அதிகரிக்கிறது. இருப்பினும், அந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications