பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு என்ன காரணம்.. உண்மையை போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்! பரபர
சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பாஜக இடையே கூட்டணி ஏற்பட்ட நிலையில், அவர்கள் பல ஆண்டுகளாக ஒன்றாகவே இணைந்து பயணித்தனர். கடந்த 2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர்.

இடையில் இந்தக் கூட்டணியில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்ட போதிலும், இந்த கூட்டணி தொடர்ந்து இணைந்தே பயணித்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு திடீரென என்டிஏ கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டணி முறிவு: என்ன தான் தற்போது கூட்டணியில் இருந்து விலகினாலும் கூட லோக்சபா தேர்தல் சமயத்தில் மீண்டும் அவர்கள் கூட்டணியை அமைத்துக் கொள்வார்கள் என்று திமுக உள்ளிட்ட எதிர்த் தரப்பு கூறியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அதிமுக தலைவர்கள் மீண்டும் பாஜக உடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருந்தனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட இது தொடர்பான கேள்விக்குக் காட்டமாகவே பதிலளித்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை விமர்சிக்கும் வகையில் பேசியதே கூட்டணியில் இருந்து விலகக் காரணம் என்று சொல்லப்பட்டது. இதற்கிடையே இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் பாஜக அதிமுக கூட்டணி முறிவு குறித்துப் பேசியுள்ளார். அதில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக என்ன காரணம் என்பதை அவர் விளக்கியுள்ளார்.
என்ன காரணம்: ஒட்டன்சத்திரத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "லோக்சபா தேர்தல் சமயத்தில் இந்த நாட்டின் பிரதமராக வருவதற்குத் தகுதி நரேந்திர மோடிக்கு இருக்கிறது என்று எடப்பாடி தொடங்கி நாங்கள் அனைவரும் முன்பு கூறினோம். அதேபோல தமிழ்நாட்டின் முதல்வராக வரும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்று நாங்கள் இப்போது சொல்கிறோம்.
ஆனால், இப்போது பாஜக என்ன சொல்கிறது எனப் பாருங்கள். இப்போது நாட்டின் பிரதமராக வரும் தகுதி மோடிக்கு இருக்கிறது என்று சொல்லும் தமிழ்நாடு பாஜக, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக வரும் தகுதி அண்ணாமலைக்கு இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்.

காவடி தூக்க முடியாது: பழனிக்குக் காவடி தூக்க வேண்டும் என்றால் அது பக்தி தூக்கலாம்.. அண்ணாமலைக்கு நாங்கள் எதற்காகக் காவடி தூக்க வேண்டும். இப்படி எல்லாம் பேசக் கூடாது. இதைக் கண்டிக்க வேண்டும். எடப்பாடி முதல்வராக வர வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள் எனச் சொன்னால் அதைச் செய்வதில்லை. மாறாகத் தொடர்ந்து அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். அப்போ நாம் என்ன இளிச்சவாயன்களா.. இது குறித்து அமித் ஷா, நட்டாவிடம் கூட கூறினார்,
அதன் பின்னரே பாஜக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.. அதன் பிறகே இனி எங்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார் எடப்பாடி" என்று காட்டமான கருத்துகளை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications