சென்னை, நெல்லை வெள்ளம் ஏற்பட காரணமே இதுதான்.. பட்டியலிட்டு விளக்கிய முதல்வர் ஸ்டாலின்! என்ன சொன்னார்
சென்னை: கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாநிலங்களில் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
கடந்த மாதம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை கொட்டியது. முதலில் டிச. தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கியது. இரண்டு நாட்கள் கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது.

மிக்ஜாம் புயல் சென்னை அருகே கரையைக் கடக்கவில்லை என்ற போதிலும், அது சென்னை அருகே நீண்ட நேரம் நிலை கொண்டதே மழை கொட்டி தீர்க்க காரணமாக அமைந்தது.. அதன் பிறகு நீர் வடிந்து சென்னை இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் வரை ஆனது.
கனமழை: அதேபோல கடந்த மாதம் இறுதியில் தென்மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பல மணி நேரம் மழை நின்று பெய்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தண்ணீர் வடிந்த போதிலும், இந்த கனமழையால் மிக மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழையால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த மழைக்கான காரணம் என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார்.. கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்துப் பேசியிருந்தார். இந்த கவிதை நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இதில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் கலந்து கொண்டார்.
முதல்வர் ஸ்டாலின்: இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கவிப்பேரரசு வைரமுத்து தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும், அவருடைய கவிதைகளை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே எனது மகா ஆசை..
இந்த ஐம்பூதங்களைப் பற்றி கவிதைத் தொகுப்பு "மகா கவிதை" தமிழ் இலக்கியத்தைத் தொல்காப்பியம் தொடங்கிய இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. மழை பற்றிய கவிதையில், அவர் "திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை" என்று கூறுகிறார். இதுதான் நாம் சில வாரங்களுக்கு முன்பு பார்த்த மழை.
காரணம் என்ன: சென்னையாக இருந்தாலும் சரி, நெல்லையாக இருந்தாலும் சரி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதி கனமழை என்று சொன்னார்களே தவிர எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்லவில்லை. ஏரி உடைந்து கொட்டியது போல் வானம் உடைந்து மழை பெய்துள்ளது. நூறு ஆண்டில், பெரிய மழை என்று சொல்கிறோம். ஆனால், இதற்கான காரணங்களைச் சொல்லவில்லை. ஆனால் உண்மையான காரணங்களை வைரமுத்து இந்த நூலில் சொல்லிவிட்டார்.
மனிதன் இப்போது பூதங்களைத் திண்ணத் தொடங்கி விட்டான். அதனால்தான் பூதங்கள் மனிதனைத் தின்னத் தொடங்கிவிட்டன என்று வைரமுத்து இந்த நூலில் கூறுகிறார். காலநிலை மாற்றம் தான் நாம் எதிர்கொள்ளப்போகும் பெரும் ஆபத்து. 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்ட வேண்டும் என்று பல உலக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
இந்தியாவில் எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களைத் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடக்கமாகத் தான் துறையின் பெயரைச் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை என்று அறிவித்தோம்" என்றார்.












Click it and Unblock the Notifications